ஜாதி ரீதியாக அரிவாள் வெட்டுப்பட்ட மாணவன் பிளஸ் 2வில் 469 மார்க்
ஜாதி ரீதியாக அரிவாள் வெட்டுப்பட்ட மாணவன் பிளஸ் 2வில் 469 மார்க்
ADDED : மே 06, 2024 11:43 PM

திருநெல்வேலி : நாங்குநேரியில் பள்ளி மாணவர்களால் ஜாதி ரீதியாக அரிவாளால் வெட்டப்பட்ட பிளஸ் 2 மாணவன் சின்னத்துரை 469 மதிப்பெண்கள் பெற்றார்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்தவர் சின்னத்துரை 18. இவரது தங்கை சந்திரா செல்வி. பட்டியல் இனத்தினர். ஆகஸ்ட் 9ம் தேதி இவருடன் பள்ளியில் பயிலும் வேறு ஜாதி மாணவர்கள், வீடு புகுந்து சின்னதுரையை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். தடுத்த சந்திரா செல்விக்கும் வெட்டு விழுந்தது.
ஜாதி ரீதியாக தாக்குதலுக்குள்ளான இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அவர் ஆசிரியர் உதவியுடன் பிளஸ் 2 தேர்வு எழுதினார்.
நேற்று வெளியான தேர்வு முடிவில் அவர் தமிழில் 71, ஆங்கிலத்தில் 93, பொருளாதாரத்தில் 42, வணிகவியலில் 84, கணக்குப்பதிவியலில் 85, கணிப்பொறி பயன்பாட்டில் 94 என 469 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். அவரை பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தொலைபேசியில் பாராட்டினார்.