பாலிடெக்னிக்குகளில் 50% இடம் காலி; நேரடியாக மாணவர்கள் சேர அழைப்பு
பாலிடெக்னிக்குகளில் 50% இடம் காலி; நேரடியாக மாணவர்கள் சேர அழைப்பு
ADDED : ஜூலை 11, 2024 09:36 AM

சென்னை: 'பாலிடெக்னிக் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் முடிந்தாலும், 50 சதவீத இடங்கள் காலியாக உள்ளன. வேலைவாய்ப்பு பிரகாசமாக உள்ளதால், மாணவர்கள் நேரடியாக வந்து சேரலாம்' என, தொழில்நுட்ப கல்வி இயக்குனர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுதும் 403 சுயநிதி கல்லுாரிகள், 54 அரசு கல்லுாரிகள், 34 அரசு நிதியுதவி பெறும் கல்லுாரிகள், ஒரு உணவு மேலாண்மை பயிற்சி கல்லுாரி உட்பட, 496 பாலிடெக்னிக் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவற்றில், 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு முதலாம் ஆண்டும்; பிளஸ் 2 முடித்தவர்களுக்கு இரண்டாம் ஆண்டும் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, ஏற்கனவே கவுன்சிலிங் நடந்து முடிந்துள்ள நிலையில், 50 சதவீதத்துக்கு மேலான இடங்கள் காலியாக உள்ளன.
கவுன்சிலிங்குக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் மற்றும் பாலிடெக்னிக் படிக்க விரும்பும் மாணவர்கள், தாங்கள் விரும்பும் கல்லுாரிகளுக்கு நேரில் சென்று சேர்ந்து கொள்ளலாம். செப்டம்பர் வரை மாணவர் சேர்க்கை தொடரும் என, தொழில்நுட்ப கல்வி இயக்குனர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:
பாலிடெக்னிக் கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. கடந்த கல்வி ஆண்டில் 62,410 மாணவர்கள் செமஸ்டர் தேர்வு எழுதிய நிலையில், 54,850 மாணவர்கள் அதாவது 75 சதவீதம் பேர், பல்வேறு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். குறைந்தபட்சம் மாதம் 15,000 முதல் 30,000 ரூபாய் வரை, ஆரம்ப கட்ட சம்பளம் கிடைத்துள்ளது.
மாணவர்களின் கல்வித்தரம் மற்றும் திறன்களை மேம்படுத்த, நான் முதல்வன் திட்டத்தில், 2,360 கோடி ரூபாயில், 44 அரசு கல்லுாரிகளில், உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.