ADDED : ஜூன் 27, 2024 01:45 AM
சென்னை:போலியான தகவல்களுடன், அங்கீகாரம் கேட்டு விண்ணப்பித்த, 56 தட்டச்சு நிறுவனங்களின் விண்ணப்பங்களை, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் நிராகரித்துள்ளது.
தமிழகம் முழுதும், 2,000க்கும் மேற்பட்ட தட்டச்சு, சுருக்கெழுத்துக்கான வணிகப் பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன. அவற்றில் ஆண்டுதோறும், இரண்டு லட்சம் பேர் வரை பயிற்சி பெற்று, தேர்வு எழுதுகின்றனர்.
இந்நிலையில், அரசு பணிகளுக்கு தட்டச்சு, சுருக்கெழுத்து தெரிந்தவர்கள் அதிகம் தேவைப்படுவதால், அவற்றை படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இதையடுத்து, புதிய பயிற்சி மையங்களுக்கு அனுமதி வழங்குவதற்கான புதிய விதிகள் ஏற்படுத்தப்பட்டு, கடந்த ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, புதிய பயிற்சி மையங்கள் மற்றும் இடம் மாற்றத்துக்கு அங்கீகாரம் கேட்டு, 500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் விண்ணப்பித்தன.
அந்த நிறுவனங்களில், தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சார்பில் கள ஆய்வு நடத்தப்பட்டது. இதில், 56 நிறுவனங்கள், தங்கள் விண்ணப்பங்களில் தவறான மற்றும் போலி தகவல்களை கூறியது தெரிய வந்தது. இதையடுத்து, 56 நிறுவனங்களின் விண்ணப்பங்களை தள்ளுபடி செய்து, அவற்றின் பெயர் பட்டியல் விபரத்தை, உயர் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.