ஓய்வு பெற்ற பேராசிரியையிடம் ரூ.84.50 லட்சம் நுாதன மோசடி
ஓய்வு பெற்ற பேராசிரியையிடம் ரூ.84.50 லட்சம் நுாதன மோசடி
ADDED : ஜூலை 01, 2024 03:01 AM
தேனி: தேனியில் 'மும்பை போலீசார்' எனக்கூறி ஓய்வு பெற்ற பேராசிரியையிடம் ரூ.84.50 லட்சத்தை நுாதன முறையில் மோசடி செய்த மர்மநபர்கள் குறித்து தேனி சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தேனி கெங்குவார்பட்டி ஓய்வு பெற்ற வேதியியல் துறை பேராசிரியை பானுமதி 74. இவரது அலைபேசி வாட்ஸ் அப் மூலம் மே 18ல் தொடர்பு கொண்ட சிலர், 'மும்பை போலீசில் இருந்து பேசுகிறோம்' என்றனர்.
மேலும் 'பேராசிரியை பெயரில் வாங்கிய சிம்கார்டு மூலம் வங்கி கணக்கு துவங்கி, அதன் மூலம் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடந்துள்ளது. இதனால் தங்களை கைது செய்ய உள்ளோம்,' எனவும் கூறினர்.
அதிர்ந்த பேராசிரியையிடம் இதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது என எச்சரித்தனர். மேலும் விசாரணைக்காக வங்கி கணக்கில் உள்ள பணத்தை குறிப்பிட்ட வங்கி கணக்குகளுக்கு அனுப்பவும் மிரட்டினர். விசாரணை முடிந்ததும் பணம் திருப்பி அனுப்பப்படும் எனவும் தெரிவித்தனர்.
அதை நம்பிய பேராசிரியை, 5 தவணைகளாக ரூ.84.50 லட்சத்தை மர்மநபர்கள் தெரிவித்த வங்கி கணக்குகளில் செலுத்தினார்.
பின் அலைபேசியில் தொடர்பு கொண்ட மர்மநபர்கள், மே 18 முதல் ஜூன் 20 வரை பேராசிரியை எந்த பணிகளும் செய்ய முடியாதவாறும் கண்காணித்தனர்.
ஒரு மாதத்திற்கு பின் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பேராசிரியை தேனி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, எஸ்.ஐ., தாமரைக்கண்ணன் ஆகியோர் மோசடியில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.