இந்தியாவில் 5 நாட்களில் ஒரு கோடீஸ்வரர் உருவாகிறார்
இந்தியாவில் 5 நாட்களில் ஒரு கோடீஸ்வரர் உருவாகிறார்
ADDED : ஆக 30, 2024 02:15 AM
மும்பை,:இந்தியாவில் கடந்த ஆண்டில், ஐந்து நாட்களுக்கு ஒரு கோடீஸ்வரர் புதிதாக உருவாகி இருப்பதாக, ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
மும்பையைச் சேர்ந்த ஹூருன் ஆய்வு நிறுவனம், 2024ம் ஆண்டுக்கான இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம், கிட்டத்தட்ட 1,000 கோடி ரூபாய் நிகர சொத்து மதிப்பு கொண்டவர்களை பணக்காரர்களாக கணக்கில் எடுத்துக் கொள்கிறது.
அதன்படி, 2024ம் ஆண்டுக்கான பணக்காரர்கள் பட்டியலில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த 334 இந்தியர் குடும்பங்கள் இடம் பிடித்து உள்ளனர். முந்தைய ஆண்டை விட, தற்போது 75 பணக்காரர்கள் அதிகரித்து உள்ளனர். இது 29 சதவீத வளர்ச்சி ஆகும்.
அறிக்கையில் மேலும் இடம்பெற்றுள்ள தகவல்கள் பின்வருமாறு:
இந்திய பணக்காரர்கள் பட்டியலில், ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியை முந்தி, 11.61 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன், அதானி குழும தலைவர் கவுதம் அதானி முதலிடம் பிடித்து உள்ளார்.
முகேஷ் அம்பானி 10.14 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 2வது இடத்தையும், 3.14 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன், ஷிவ் நாடார் மூன்றாவது இடத்தையும் பிடித்து உள்ளனர்.
இந்திய பணக்காரர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு, கிட்டத்தட்ட 159 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இதன் மதிப்பு, சவுதி அரேபியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் ஒருங்கிணைந்த ஜி.டி.பி.,யை விட அதிகமாகும். இந்தியாவின் ஜி.டி.பி., மதிப்பில் இது பாதியை தாண்டுகிறது.
அதிக எண்ணிக்கையில் பணக்காரர்கள் வசிக்கும் நகரங்கள்
1. மும்பை - 386
2. புதுடில்லி - 217
3. ஹைதராபாத் - 104
4.பெங்களூரு - 100
5.சென்னை - 82
6.கோல்கட்டா - 69
7.அகமதாபாத் - 67
8.புனே - 53
9.சூரத் - 28
10.குருகிராம் - 23.

