ஊரகவளர்ச்சித்துறையில் 10 மாதங்களாக சம்பளமின்றி பணிபுரியும் கணக்காளர்கள்
ஊரகவளர்ச்சித்துறையில் 10 மாதங்களாக சம்பளமின்றி பணிபுரியும் கணக்காளர்கள்
ADDED : பிப் 22, 2025 03:32 AM
மதுரை: ஊரக வளர்ச்சித்துறையில் வாழ்வாதார இயக்கத்தில் பணிபுரியும் கிராம வறுமை ஒழிப்பு சங்க கணக்காளர்கள் (வி.பி.ஆர்.சி.,), ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு கணக்காளர்கள் (பி.எல்.எப்.,) 10 மாதங்களாக சம்பளம் கிடைக்காமல் தவிப்பில் உள்ளனர்.
ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் வாழ்வாதார இயக்கம் செயல்படுகிறது. இதில் மேற்கண்ட கணக்காளர்கள் 2007 முதல் பணிபுரிகின்றனர். இவர்கள் ஊராட்சி பகுதிகளில் உள்ள மகளிர் குழுக்களுக்கு அரசின் சுழல் நிதியை பெற்று கடன் வழங்குவது, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, முதல்வர் காலை உணவுத் திட்டத்தில் பணியாற்றும் மைய பொறுப்பாளர்கள், ஊராட்சிகள், பள்ளிகளில் பணிபுரியும் துாய்மை காவலர்கள் உட்பட ஊழியர்களுக்கான ஊதியம் வழங்கும் பதிவேடுகளை பராமரிப்பது, அரசு நலத்திட்டங்களை மக்களிடம் சேர்ப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
மாநில அளவில் 12 ஆயிரத்து 500 கிராமங்கள் உள்ளன. ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கணக்காளர் பணிபுரிகிறார். இவர்களுக்கு மகளிர் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் இருந்து கிடைக்கும் வட்டியைக்கொண்டு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படுகிறது. சரியாக கடன் வசூலாகாத கிராமங்களில் இவர்களுக்கான இந்த சொற்ப தொகையும் கிடைக்காமல் போய்விடுகிறது.
பெரும்பாலும் பல கிராமங்களில் சுழல்நிதி கடன் சரிவர வசூலாவதில்லை. இவ்வகையில் தமிழகத்தில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு பணிபுரியும் கணக்காளர்களுக்கு 7 முதல் 10 மாதங்களுக்கும் மேலாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் வாழ்வாதாரம் பாதித்துள்ளதாக புலம்புகின்றனர்.
ஊரக வளர்ச்சித்துறை அனைத்துப் பணியாளர்கள் சங்க மாநில தலைவர் சார்லஸ் கூறுகையில், ''கணக்காளர்களுக்கு சம்பளம் வழங்க தனி நிதிஒதுக்கீடு செய்து மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.இதுகுறித்து திருச்சியில் ஆலோசனை நடத்தினோம். அதன்படி ஏப்.,17ல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளோம்,'' என்றார்.

