ADDED : ஏப் 09, 2024 04:43 AM
சென்னை : நடிகர் தனுஷ் மற்றும்ஐஸ்வர்யா ஆகியோர், பரஸ்பரம் விவாகரத்து கோரி, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளனர்.
நடிகர் ரஜினியின் மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா, 2004ல் நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் மனமொத்து பிரிவதாக, 2022 ஜனவரியில் அறிவித்தனர்.
பிரிவு தொடர்பாக, சமூக வலைதளத்தில் இருவரும் தனித்தனியாக வெளியிட்ட அறிவிப்பில், 'கடந்த 18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதியாக, பெற்றோராக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம், வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தன.
'தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்' என்று குறிப்பிட்டு இருந்தனர்.
இந்நிலையில், இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

