முன்னாள் அமைச்சர் தம்பியிடம் 2 நாள் விசாரிக்க அனுமதி
முன்னாள் அமைச்சர் தம்பியிடம் 2 நாள் விசாரிக்க அனுமதி
ADDED : செப் 06, 2024 03:01 AM
கரூர்:கரூர் மாவட்டம், வாங்கல், குப்புச்சிப்பாளையத்தை சேர்ந்-த தொழிலதிபர் பிரகாஷ், 50; இவரது மகள் பெயரில், கரூர் அருகே குன்னம்பட்டி, தோரணகல்பட்டியில், 22 ஏக்கர் நிலம் உள்ளது.
அதை யுவராஜ், பிரவீன், ரகு, சித்தார்த்தன், புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூர் அ.தி.மு.க., துணை செயலர் செல்வராஜ், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்க கூட்டமைப்பு தலைவர் மாரப்பன் ஆகியோர் போலி ஆவணங்கள் தயாரித்து, கிரயம் செய்து கொண்டதாக, மேலக்கரூர் சார்பதிவாளர், கரூர் டவுன் போலீஸில் புகாரளித்தார்.
சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கடந்த ஜூலை மாதம், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர், பிரவீன், வில்லிவாக்கம் முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரித்திவிராஜ் ஆகியோரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர். தற்போது மூவருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த, 2ல் நிலம் அபகரிப்பு புகாரில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தம்பி சேகர், புஞ்சை தோட்டக்குறிச்சி டவுன் பஞ்., அ.தி.மு.க., துணை செயலர் செல்வராஜை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
நேற்று முன்தினம் யுவராஜ் என்பவரை கைது செய்தனர்.
இதனிடையே கரூர் ஜே.எம். எண்-1 நீதிமன்றத்தில், சேகரை நேற்று மாலை ஆஜர்படுத்திய போலீசார், காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டனர். இரண்டு நாள் சி.பி.சி.ஐ.டி., காவலில் விசாரிக்க, நீதிபதி பரத்குமார் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.