ADDED : ஜூலை 04, 2024 05:38 AM

விரைவில் புதிய வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்கப்படவுள்ளன. மக்களுக்கு தேவையான வழித்தடங்களில் மினிபஸ் வந்தால் பயணம் சிறக்கும்.
தமிழகம் முழுவதும், 2,875 மினி பஸ்கள் இயங்கி வருகின்றன. மினி பஸ்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பயணியருக்காக புதிய மாற்றங்களை செய்து, சேவையை விரிவுபடுத்த, அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மினி பஸ் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
முன்னோட்டமாக பல்வேறு மாற்றங்களைச் செய்து, புதிய மினி பஸ் வரைவு திட்டம், அரசிதழில் வெளியிடப்பட்டது.
இதில், தற்போது, 20 கி.மீ., வரை மினி பஸ்கள் இயக்கலாம்; அதில், நான்கு கி.மீ., ஏற்கனவே உள்ள வழித்தடத்தில் செல்லலாம்.
மீதமுள்ள, 16 கி.மீ., புதிய வழித்தடத்தில் இயக்க வேண்டும். புதிய வரைவின் படி, 25 கி.மீ., வரை மினி பஸ்களை இயக்கலாம்; இதில், 30 சதவீதம் ஏற்கனவே உள்ள வழித்தடத்திலும், மீதமுள்ள, 17 கி.மீ., புதிய வழித்தடத்தில் இயக்க வேண்டும் என விதிமுறை மாற்றப்பட்டது.
மினி பஸ்கள் சென்றடையும் இடத்தில் இருந்து, அடுத்த ஒரு கி.மீ., துாரத்துக்குள் பள்ளி, கல்லுாரி, மருத்துவமனை, கோவில், சந்தை இருந்தால், மினிபஸ் இயக்க வட்டார போக்குவரத்துதுறை அதிகாரிகள் அனுமதி வழங்கலாம் என கூறப்பட்டுள்ளது.
திருப்பூர் தெற்கு ஆர்.டி.ஓ., ஆனந்த் கூறுகையில், ''புதிய மினிபஸ் வரைவு திட்டம் தொடர்பாக, ஜூலை 14 வரை கருத்து தெரிவிக்கவும், ஜூலை, 22ம் தேதிக்கு பின் உள்துறை செயலர் தலைமையில் ஆலோசனை நடத்தவும் அரசு முடிவு செய்துள்ளது. அரசு தரப்பில் இருந்து விரிவான அரசாணை வெளியான பின்னரே, மினி பஸ்களுக்கு ஒப்புதல் வழங்குவது குறித்து முறையான அறிவிப்புகள் வெளியிடப்படும்,'' என்றார்.
- நமது நிருபர் -