அரசு திட்டங்களில் 'மாஜி' முதல்வர்கள் பெயரை அகற்ற ஐகோர்ட்டில் வழக்கு
அரசு திட்டங்களில் 'மாஜி' முதல்வர்கள் பெயரை அகற்ற ஐகோர்ட்டில் வழக்கு
ADDED : ஜூலை 04, 2024 02:26 AM
மதுரை:தமிழக அரசின் திட்டங்களில் முன்னாள் முதல்வர்கள், கட்சி பொறுப்பாளர்களின் பெயர், படம் இடம் பெற்றுள்ளதை அகற்ற தாக்கலான வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
புதுக்கோட்டை மாவட்டம், கொடும்பாளூர் ஆறுமுகம் தாக்கல் செய்த பொதுநல மனு:
அரசின் திட்டங்கள் மக்களின் வரிப்பணத்தால் செயல்படுத்தப்படுகின்றன. அதில் ஆட்சியாளர்களின் போட்டோக்களை பதிவிட்டு விளம்பரம் தேடுகின்றனர்.
தமிழகத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., தான் மாறி, மாறி ஆட்சி செய்கின்றன. இரு ஆட்சிகளிலும் திட்டங்களில் முன்னாள் முதல்வர்களின் படம் இடம் பெறுகிறது. மக்களுக்கு அவர்கள் சொந்த பணத்தில் சேவை செய்யவில்லை. ஆட்சியாளர்கள் மாத சம்பளம் பெறுகின்றனர்.
அரசின் திட்டங்களில் முன்னாள் முதல்வர்கள், கட்சி பொறுப்பாளர்களின் பெயர், படம் இடம் பெற்றுள்ளதை அகற்ற வேண்டும். அரசு அலுவலகங்கள், திட்டங்களில் தமிழக அரசின் முத்திரை மட்டுமே இடம் பெற உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு: விளம்பரம் தேடும் நோக்கில், இதுபோன்ற தேவையற்ற வழக்குகள் தாக்கலாவதால் நீதிமன்ற நேரம் வீணாகிறது. தள்ளுபடி செய்து அபராதம் விதிக்க நேரிடும்.
இவ்வாறு எச்சரித்தனர்.
மனுதாரர் தரப்பில் வாபஸ் பெற்றதால், மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.