'டயாலிசிஸ்' சிகிச்சைக்கு ஊழியர்கள் நியமிக்க கோரிய வழக்கு தள்ளுபடி
'டயாலிசிஸ்' சிகிச்சைக்கு ஊழியர்கள் நியமிக்க கோரிய வழக்கு தள்ளுபடி
ADDED : மார் 05, 2025 05:29 AM

மதுரை ; அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ள, தொழில்நுட்ப பணியாளர்களை நியமிக்க தாக்கலான வழக்கை, உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
மதுரை ஆனந்த்ராஜ் தாக்கல் செய்த பொதுநல மனு:
சிறுநீரகம் பாதிக்கப்பட்டோருக்கு அரசு மருத்துவமனைகளில் இயந்திரம் வாயிலாக, 'டயாலிசிஸ்' செய்யப்படுகிறது. தற்காலிக மற்றும் பயிற்சி மாணவர்கள் வாயிலாக டயாலிசிஸ் செய்யப்படுகிறது.
மருத்துவ கல்வி இயக்குநரகம், டயாலிசிஸ் தொழில்நுட்ப பணியிடங்களில், 624 பேரை நிரந்தரமாக நியமிக்க சுகாதார துறைக்கு, 2023ல் பரிந்துரைத்தது.
டயாலிசிஸ் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. நிரந்தர தொழில்நுட்ப பணியாளர்களை நியமிக்க தமிழக சுகாதாரத் துறை செயலருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு, 'இது, அரசின் கொள்கை முடிவு சம்பந்தப்பட்டது; நீதிமன்றம் தலையிட முடியாது. முடிவெடுக்குமாறு அரசை கட்டாயப்படுத்த முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என, உத்தரவிட்டது.