ADDED : மார் 06, 2025 01:24 AM
கோவை: கோவை மாநகராட்சி, பல்வேறு வகையான வரிகள் வாயிலாக, 577.71 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது.
கோவை மாநகராட்சி சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், குப்பை வரி, பாதாள சாக்கடை சேவை கட்டணம், வரியில்லாத குத்தகை இனங்கள் என்ற வகைகளில் வருவாய் ஈட்டுகிறது. மொத்தம், 5.87 லட்சம் பேர் சொத்து வரி செலுத்துகின்றனர்.
நடப்பு நிதியாண்டில் மொத்த வரியினங்களாக, 766.43 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டும்; தற்போது வரை, 577.71 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. சொத்து வரியாக மட்டும், 597.94 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டும். இதுவரை, 394.81 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இன்னும், 203.13 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டியுள்ளது.
கடந்த, 2023-24 நிதியாண்டில், 90.45 சதவீதம் சொத்து வரி வசூலித்து சாதனை புரிந்ததால், மாநகராட்சிக்கு, 80 கோடி ரூபாய் மானியம் கிடைத்தது. நடப்பு நிதியாண்டு மார்ச், 31ல் முடிகிறது. இதுவரை, 76.76 சதவீதமே வசூலிக்கப்பட்டிருக்கிறது.
கடந்தாண்டு சதவீதத்தை எட்ட வேண்டுமெனில், இன்னும், 13.69 சதவீதம் வசூலிக்க வேண்டும். வரி வசூலை அதிகரிக்க, பில் கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.