நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு அகற்ற எடுத்த நடவடிக்கை அறிக்கை கேட்கிறது ஐகோர்ட்
நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு அகற்ற எடுத்த நடவடிக்கை அறிக்கை கேட்கிறது ஐகோர்ட்
ADDED : ஆக 22, 2024 02:24 AM
சென்னை:தமிழகம் முழுதும் நீர் நிலைகள், அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, அரசு எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், குன்னியூர் கிராமத்தில், அரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.
அப்போது, 'நீர் நிலைகள் மற்றும் அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி, 2004ல் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன?' என, முதல் பெஞ்ச் கேள்வி எழுப்பியது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை கண்காணிக்க, மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதையடுத்து, 'குழுக்கள் அமைக்கப்பட்டாலும், இன்னும் எவ்வளவு ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது; நீர் நிலைகள் எந்த அளவில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன?' என கேள்வி எழுப்பிய முதல் பெஞ்ச், 'அரசு நியமித்த குழுக்கள் முறையான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறதா?' எனவும் கேட்டது.
அதைத்தொடர்ந்து இவ்வழக்கில், பிரதிவாதியாக தலைமைச் செயலரை சேர்த்து, தமிழகம் முழுதும் நீர் நிலைகள், அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. விசாரணையை, மூன்று வாரங்களுக்கு தள்ளி வைத்தது.