மடங்களுக்கு தக்கார் நியமனத்தை எதிர்த்து நித்யானந்தா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
மடங்களுக்கு தக்கார் நியமனத்தை எதிர்த்து நித்யானந்தா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
ADDED : செப் 05, 2024 12:12 AM
சென்னை:நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள மடங்களுக்கு, தக்கார் நியமித்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, நித்யானந்தா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், 'அவர் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆஜராகலாமே...' என, கேள்வி எழுப்பியுள்ளது.
திருவாரூர், நாகை மாவட்டங்களில் உள்ள வேதாரண்யம் ஸ்ரீ போ.கா.சாதுக்கள் மடம், ஸ்ரீ அருணாசல ஞானதேசிக சுவாமிகள் மடம், ஸ்ரீ பால்சாமி சங்கரசாமி மடம், ஸ்ரீ சோமநாத சுவாமி கோவில் ஆகிய நான்கு மடங்களின் மடாதிபதியாக நித்யானந்தாவை நியமித்து, மடாதிபதி ஆத்மானந்தா அறிவித்தார்.
இதுதொடர்பாக நாகை நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், பக்தர் அளித்த புகாரின் அடிப்படையில், நான்கு மடங்களையும் நிர்வகிக்க, அறநிலையத் துறை தக்காரை நியமித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, நித்யானந்தா சார்பில் அதிகாரம் பெற்ற நித்யா கோபிகானந்தா என்ற உமாதேவி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நித்யா கோபிகானந்தா என்ற உமாதேவிக்கு வழங்கப்பட்ட பொது அதிகாரத்தின் மீது சந்தேகம் உள்ளது.
எனவே, நித்யானந்தாவிடம் விசாரணை நடத்த வேண்டும் என்பதால், அவரை ஆஜராக சொல்லும்படி, மனுதாரர் தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி கூறினார்.
ஆன்மிக உரைகள் சிறப்பு
இதற்கு மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், 'நித்யானந்தா இந்தியாவில் இல்லை. அவர் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியும் அல்ல' என பதிலளித்தார்.
'நித்யானந்தா எங்கிருக்கிறார் என தெரிய வேண்டும். வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆஜராக சொல்லலாமே...' என, நீதிபதி கேள்வி எழுப்பினார்.
'அவர் ஆஜராக இயலாது' என, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, 'மடங்களை நிர்வகிக்க, தக்கார் நியமித்து அறநிலையத் துறை பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது' என தெரிவித்த நீதிபதி, 'நித்யானந்தாவின் ஆன்மிக உரைகள் சிறப்பானவை.
அவரது 'கதவைத் திற காற்று வரட்டும்' என்ற தொடரில் ஆழ்ந்த அர்த்தங்கள் உள்ளன. காஞ்சி மஹா பெரியவர் கூறியதுபோல, சன்னியாசி சன்னியாசியாக இருக்க வேண்டும்' என கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.