பா.ஜ., மேலிட பொறுப்பாளரிடம் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் சரமாரி புகார்
பா.ஜ., மேலிட பொறுப்பாளரிடம் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் சரமாரி புகார்
ADDED : ஜூலை 09, 2024 06:39 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் முதல்வர் மற்றும் பா.ஜ., அமைச்சர்களுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள பா.ஜ., -- எம்.எல்.ஏ.,க்களை மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா சமாதானப்படுத்தினார்.
புதுச்சேரியில் என்.ஆர் காங்.,- பா.ஜ., கூட்டணி அரசு ஆட்சி நடந்து வருகிறது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் தோல்வியடைந்தார்.
இதையடுத்து, என்.ஆர். காங்.,-பா.ஜ., கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஆளும்கட்சியாக இருந்த போதிலும், கூட்டணி சார்பில் முதல்வராக இருக்கும் ரங்கசாமி மற்றும் பா.ஜ., அமைச்சர்கள் செயல்பாடுகளால் தான் லோக்சபா தேர்தலில் தோல்வியடைய நேரிட்டது என்று பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களில் சிலர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
சமீபத்தில், டில்லிக்கு சென்ற பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, அமைப்பு பொதுச் செயலர் சந்தோஷ் ஜி ஆகியோரை சந்தித்து முறையிட்டனர்.இந்த பிரச்னையை பேசி தீர்க்க பா.ஜ., தேசிய தலைவர் நட்டா உத்தரவிட்டதன் பேரில், பா.ஜ., மேலிட பொறுப்பாளர்நிர்மல்குமார் சுரானா நேற்று புதுச்சேரிக்கு வந்தார்.
பா.ஜ., தலைமை அலுவலகத்தில், முதல்வர், அமைச்சர்களுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களை சந்தித்து அவர்களுடைய கருத்துகளை கேட்டறிந்தார்.
அப்போது, என்.ஆர் காங்., - பா.ஜ., ஆட்சியின் மீது கெட்டப் பெயர் ஏற்பட்டுள்ளதால் தான் லோக்சபா தேர்தலில் பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் தோல்வியை தழுவினார். புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் பல துறைகளில் ஊழல் மலிந்துள்ளது. ஆட்சி நிர்வாகம் இப்படியே நடத்தப்பட்டால், வரும் சட்டசபை தேர்தலிலும் பா.ஜ.,விற்கு பெரும் பின்னடைவுதான் ஏற்படும் என கொந்தளித்தனர்.
தற்போது பா.ஜ., சார்பில் அமைச்சர்களாக உள்ளவர்களை மாற்றிவிட்டு, சுழற்சி முறையில் எங்களுக்கு அமைச்சர் பதவியை வழங்க வேண்டும்' எனவும் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தினர்.
அவர்களை சமாதானப்படுத்திய பா.ஜ., மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, நீங்கள் குறிப்பிடும் அனைத்து விஷயங்களையும் குறிப்பெடுத்துக் கொண்டேன். அதையெல்லாம் கட்சி மேலிடத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று, 10 நாட்களுக்குள் முடிவை அறிவிக்க வைக்கிறேன்' என உறுதியளித்தார்.
அதையடுத்து, நிர்மல் குமார் சுரானாவுடன் மல்லுகட்டிய பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள், 'எங்கள் உணர்வுகளை கொட்டி விட்டோம். நல்ல தீர்வுக்காக காத்திருக்கிறோம். உரிய பதில் கிடைக்காவிட்டால் போராட்டக் களத்துக்குத்தான் செல்ல முடியும்' என்று கூறியுள்ளனர்.

