பா.ஜ., கேட்டதால் 5 தொகுதிகளில் தி.மு.க., டம்மி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது: சீமான்
பா.ஜ., கேட்டதால் 5 தொகுதிகளில் தி.மு.க., டம்மி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது: சீமான்
ADDED : மார் 24, 2024 02:27 AM
சென்னை:சென்னையில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள், 40 பேரை அறிமுகம் செய்யும் பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:
எல்லா கட்சிகளுக்கும், எதிர்க்கட்சியாக நாம் தமிழர் கட்சி இருக்கிறது. தகுதி வாய்ந்த, 40 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம். மருத்துவர்கள், பேராசிரியர்களை வேட்பாளர்களாக தேர்வு செய்துள்ளோம். மற்ற கட்சிகளில் அதே முகங்களை நிறுத்தியுள்ளனர்.
நம்மை பா.ஜ.,வின், 'பீ டீம்' என்றனர். ஆனால், முதல்வர் ஸ்டாலின் தான் மெயின், 'பீ டீம்' ஆக இருக்கிறார். பா.ஜ., ஏழு இடங்களை கேட்ட நிலையில், ஐந்து இடங்களில் டம்மி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். என்.ஐ.ஏ., சோதனை நடத்தி, நாங்கள் பா.ஜ.,வின், 'பீ டீம்' இல்லை என்று நிரூபித்ததற்கு நன்றி.
ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாது என்கின்றனர். தரையில் இருந்து இயக்கி, விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பும் போது, ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் எதுவும் செய்ய முடியாதா. ஓட்டுப்பதிவு இயந்திரத்தை, ஒரு நாள் சாலையில் போட்டு உடைக்கும் காலம் வரும்.
நாங்கள் கேட்ட ஆட்டோ, தீக்குச்சி போன்ற சின்னங்களை, மற்ற கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எடுத்துக் கொடுக்கிறது. எந்த சின்னம் கொடுத்தாலும், அதை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்போம். சின்னத்திற்கு ஓட்டு இல்லை; சீமானுக்கு தான் ஓட்டு என்று கூறி, என்னை மிகப்பெரிய தலைவனாக்கி விட்டனர். டிஜிட்டல் இந்தியாவில், 20 நாட்களில் தேர்தல் நடத்தி, 44 நாட்களுக்கு பிறகு ஓட்டு எண்ணிக்கை நடத்துகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
வீரப்பன் மகள்
நாம் தமிழர் கட்சியில், 20 ஆண்கள், 20 பெண்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு உள்ளனர். இதில், கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளராக, சந்தனகடத்தல் வீரப்பன் மகள் வித்யா வேட்பாளராக களமிறக்கப்பட்டு உள்ளார். இவர், பா.ஜ.,வில் இணைந்து, ஓ.பி.சி., அணி மாநில துணை தலைவராக பணியாற்றி வந்தார்.

