'என்னை சந்திக்க வராதீங்க... விவசாயிகளை சந்திச்சு பேசுங்கப்பா!' வேளாண் துறை செயலர் உத்தரவு
'என்னை சந்திக்க வராதீங்க... விவசாயிகளை சந்திச்சு பேசுங்கப்பா!' வேளாண் துறை செயலர் உத்தரவு
ADDED : பிப் 15, 2025 12:55 AM

சென்னை:'வேளாண் துறை அலுவலர்கள், வாரத்தில் மூன்று நாட்கள் விவசாயிகளை சந்திக்க வேண்டும்' என, வேளாண் துறை செயலர் தட்சிணாமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
மாநிலம் முழுதுமுள்ள வேளாண் துறை அதிகாரிகள், இதுநாள் வரை, வாரத்தில் நான்கு நாட்கள், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே, 'மீட்டிங்' நடத்தி வந்ததால், பல திட்டங்களின் கீழ், விவசாயிகள் உடனுக்குடன் மானியம் பெற முடியாத நிலைமை ஏற்பட்டது.
தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியும் கடுமையாக பாதித்து, விலைஉயர்ந்தது.
இந்நிலையில், வேளாண் துறை புதிய செயலராக தட்சிணாமூர்த்தி பொறுப்பேற்றுள்ளார். பதவி ஏற்ற கையோடு, வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இனி, வாரத்தில் மூன்று நாட்கள், காலை 9:00 மணிக்குள் வேளாண்மை, தோட்டக்கலை அலுவலர்கள், உதவி அலுவலர்கள் உள்ளிட்டோர் விவசாயிகளின் வயல்களுக்கு நேரில் செல்ல வேண்டும்.
விவசாயிகளுடன் கலந்துரையாடி, அவர்களின் கோரிக்கைகளை கேட்டு, பயிர் சாகுபடி ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
அப்போது, இருப்பிடம், தேதி, நேரம், வானிலை, திசைகாட்டி உள்ளிட்ட விபரங்களுடன் கூடியே, 'ஜியோ டேக்' முறையில், விவசாயிகளுடன் புகைப்படம் எடுத்து, தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என, உத்தரவிட்டுஉள்ளார்.
அலுவலர்கள் வயல்வெளி ஆய்வுக்கு செல்வதை, மாவட்ட வேளாண் இணை இயக்குனர்கள், தோட்டக்கலை துணை இயக்குனர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுஉள்ளார்.