ADDED : மார் 24, 2024 01:27 AM
சென்னை:தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, வெளியிட்ட அறிவிப்பு:
l லோக்சபா தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டசபை இடைத்தேர்தலில், வாக்காளர்கள் ஓட்டளிக்க செல்லும் போது, ஓட்டுச்சாவடியில் தங்கள் அடையாளத்தை மெய்ப்பிக்க, வாக்காளர் அட்டையை காண்பிக்க வேண்டும்
l அதை காண்பிக்க இயலாதவர்கள், ஆதார் அட்டை, தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணி அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி மற்றும் தபால் கணக்கு புத்தகங்கள், தொழிலாளர் நல அமைச்சக மருத்துவ காப்பீட்டு அட்டை போன்றவற்றை காண்பிக்கலாம்
l இதுதவிர, ஓட்டுனர் உரிமம், பான்கார்டு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ், இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ள புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை, மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட, இயலாமைக்கான தனித்துவமான அடையாள அட்டை போன்றவற்றில், ஏதேனும் ஒன்றை காண்பித்து ஓட்டளிக்கலாம்
l தேர்தல் கமிஷன் சார்பில் வழங்கப்படும், 'பூத் சிலிப்' அடையாள அட்டையாக ஏற்றுக் கொள்ளப்படாது. ஒரு தொகுதி வாக்காளர் பதிவு அதிகாரியால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை, வேறொரு தொகுதியில் அடையாள அட்டையாக காண்பிக்கலாம். ஆனால், அந்தத் தொகுதி வாக்காளர் பட்டியலில் வாக்காளர் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

