வெள்ளத்தில் சிக்கிய பஸ்: பயணிகள் பத்திரமாக மீட்பு: தூத்துக்குடிக்கு ஆரஞ்சு அலர்ட்
வெள்ளத்தில் சிக்கிய பஸ்: பயணிகள் பத்திரமாக மீட்பு: தூத்துக்குடிக்கு ஆரஞ்சு அலர்ட்
UPDATED : மே 15, 2024 10:06 PM
ADDED : மே 15, 2024 07:24 PM

நாகர்கோவில்: வள்ளியூர் அருகே வெள்ள நீர் சூழ்ந்த ரயில்வே தரைப்பாலத்தில் அரசு பஸ் சிக்கியது.பஸ்சில் பயணித்த 65 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதே நேரத்தில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலடர் விடுத்துள்ளார் மாவட்ட கலெக்டர் .
நாகர்கோவிலில் இருந்து திருச்செந்தூருக்கு சுமார் 65 பயணிகளுடன் சென்ற அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. வள்ளியூர் அடுத்த ரயில்வே தரைப்பாலத்தில் இன்று பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியது. இதனால் வள்ளியூரில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது இந்த சூழ் நிலையில் அப்பகுதி வழியாக சென்ற அரசு பஸ் பயணிகளுடன் சிக்கியதால் அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனை அடுத்து வள்ளியூர் தீயணைப்புத் துறையினர் பஸ் பயணிகளை அவசரக் கதவை திறந்து பத்திரமாக மீட்டனர்.
இதனிடையே பொதுமக்களில் ஒரு சிலர் பாலத்தில் நான்கு அடி அளவு உயரத்திற்கு தண்ணீர் தேங்கி உள்ளதால் பஸ்சை நிறுத்த சொல்லி டிரைவரிடம் கூறுகின்றனர். இருப்பினும் அதனை பொருட்படுத்தாத டிரைவர் பஸ்சை ஓட்டிச் சென்று மேற்கொண்டு செல்ல முடியாமல் நடுவழியில் நிறுத்திய வீடியோவும் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது
தூத்துக்குடிக்கு ஆரஞ்சு அலர்ட்: தாமிரபரணி கரைக்கு செல்ல கலெக்டர் தடை
தூத்துக்குடி மாவட்டத்தில் மே 17 வரை இடி மின்னலுடன் கனமழையும்,18 ம் தேதி மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் ,19ம் தேதி கனமழை எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இதனால் தாழ்வான பகுதியில் வசிப்போர் பாதுகாப்பாக இருக்கும்படியும், மின்சாதன பொருட்களை கவனமாக கையாள வேண்டும் என்றும், தாமிரபரணி ஆற்றில் கரையோரம் குளிக்க செல்லக்கூடாது என்றும் கலெக்டர் லட்சுமிபதி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

