ரூ.6,362 கோடி ஒதுக்கியாச்சு நிலங்களை கொடுங்கள்! தமிழக அரசை கேட்கிறார் ரயில்வே அமைச்சர்
ரூ.6,362 கோடி ஒதுக்கியாச்சு நிலங்களை கொடுங்கள்! தமிழக அரசை கேட்கிறார் ரயில்வே அமைச்சர்
ADDED : ஜூலை 25, 2024 01:08 AM

சென்னை:''மத்திய பட்ஜெட்டில், தமிழக ரயில் திட்டங்களுக்கு 6,362 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநில அரசு, நிலங்களை கையகப்படுத்திக் கொடுக்காததால், திட்டப்பணிகளில் தாமதம் ஏற்படுகிறது,'' என, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட் தமிழகத்தை மொத்தமாக ஒதுக்கி விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.  இதற்கு பதிலளித்து, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பேட்டி:
இந்த பட்ஜெட்டில், ரயில்வேயில் பாதுகாப்பு மேம்பாட்டிற்கு 1.09 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில் அடங்கிய தமிழகத்துக்கு 6,362 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது, காங்கிரஸ் ஆட்சியை ஒப்பிடுகையில், ஏழு மடங்கு அதிகம்.
தமிழகத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 77 ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் நடைபெறுகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் 678 சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் நடந்து வரும் ரயில்வே திட்டங்களுக்கு, 2,749 ெஹக்டர் நிலம் தேவை. ஆனால், இதுவரையில் 807 ெஹக்டர் நிலம் தான் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் - தனுஷ்கோடி புதிய ரயில் பாதைக்காக, 2018 - 19ல் 208 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. தற்போது இதன் மதிப்பு, 733 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. எனவே, கூடுதலாக 380 கோடி ரூபாய், 2023 - 24ல் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால், இத்திட்டத்தைக் கைவிடக் கோரி கடந்த ஏப்ரல் 2023ல், தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. இதனால்,  திட்டத்தை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
தமிழகத்தில் 2,587 கிலோ மீட்டர் நீளத்திற்கு 22 பாதைகள் அமைக்கப்படுகின்றன; இதன் மதிப்பு 33,467 கோடி ரூபாய். ஆனால், நிலம் கையகப்படுத்தி தருவதில், மாநில அரசு தாமதம் செய்வதால், பிரச்னை நீடிக்கிறது. வேகமாக கையப்படுத்தி தந்தால், திட்டங்களை விரைந்து முடிக்க முடியும்.
பிரச்னை இல்லை
ரயில் ஓட்டுனர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. 52 மணி நேரத்துக்கு மேல் ஓட்டுனர்கள் பணியாற்ற அனுமதி இல்லை. ரயில் நிலையங்களிலும், ரயில் இன்ஜின்களிலும் அவர்களுக்கான வசதியை செய்து தருகிறோம்.
பணியிடங்களை நிரப்ப இரண்டு தேர்வுகளில் 15 மொழிகளில், 3.25 கோடிக்கு மேல் எழுதியுள்ளனர். இதன் வாயிலாக 1.35 லட்சம் பேர் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
நெரிசல் குறையும்
இந்த நிதி ஆண்டில் 2,500 பொது பெட்டிகளையும், அடுத்த மூன்று ஆண்டுகளில் 10,000 பொதுப்பெட்டிகளையும் தயாரித்து இயக்க திட்டமிட்டுள்ளோம். இதனால், முன்பதிவு இல்லாத பெட்டிகளில் நெரிசல் குறையும். முன்பதிவு பெட்டி களில் ஆக்கிரமிப்பு செய்யும் பயணியர் எண்ணிக்கையும் குறையும்.
இவ்வாறு கூறினார்.

