துாத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கு செல்லத்தக்கதல்ல என அரசு வாதம்
துாத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கு செல்லத்தக்கதல்ல என அரசு வாதம்
ADDED : ஆக 30, 2024 02:10 AM
சென்னை:துாத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக, விசாரணை ஆணைய பரிந்துரைப்படி, போலீஸ் அதிகாரிகள், வருவாய் அதிகாரிகள், நிர்வாக அதிகாரிக்கு எதிராக, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரிய மனுவுக்கு, கூடுதல் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதி ஆணையம்
துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில், போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில், 13 பேர் பலியாகினர். இந்தச் சம்பவம், 2018 மே மாதம் நடந்தது.
இது தொடர்பாக விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம், 2022 மே மாதத்தில், அறிக்கை தாக்கல் செய்தது.
ஆணையத்தின் அறிக்கையை ஏற்ற தமிழக அரசு, அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், ஏற்கனவே வழங்கிய தலா, 20 லட்சம் ரூபாய் இழப்பீடு போதுமானது என்றும் முடிவெடுத்து, அதற்கான அரசாணை பிறப்பித்தது.
இதை எதிர்த்து, துப்பாக்கி சூட்டில் பலியான இளம் பெண்ணின் தாய் வனிதா, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மனுவில், 'துப்பாக்கி சூடு நடத்தியவர்களுக்கு எதிராக கொலை குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்யவில்லை; அவர்களுக்கு எதிராக, கொலை வழக்கு பதிய வேண்டும்.
'பலியானவர்களின் குடும்பங்களுக்கு, தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என்று கோரியிருந்தார்.
மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய, 'முதல் அமர்வு' முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக்கூறிய அரசு, யார் யார் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்ற விபரங்களை தெரிவிக்கவில்லை.
குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறித்து பதில் மனுவில் எதுவும் குறிப்பிடவில்லை' என்றார்.
தமிழக அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் ஆஜராகி, “ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக, சி.பி.ஐ., வழக்கு பதிந்துள்ளது. மேல் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கூடுதல் பதில் மனு
எனவே, போலீசார் மீது குற்ற நடவடிக்கை எடுக்கக்கோரிய இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல. குற்ற நடவடிக்கை தொடர்பாக மட்டுமே பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது,” என்றார்.
இதை ஏற்ற நீதிபதிகள், மனுவில் எழுப்பப்பட்ட மற்ற கோரிக்கைகள் தொடர்பாக கூடுதல் பதில் மனுவை, அரசு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.