கட்டட அனுமதி வழங்குவதில் மாற்றம் செய்ய அரசு திட்டம்
கட்டட அனுமதி வழங்குவதில் மாற்றம் செய்ய அரசு திட்டம்
ADDED : ஜூலை 10, 2024 01:08 AM
சென்னை:சுயசான்று முறையில் கட்டட அனுமதி வழங்குவதில், சில மாற்றங்கள் மேற்கொள்ள அரசு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில், 10,000 சதுரடி வரையிலான கட்டடங்களுக்கு, உள்ளாட்சி அமைப்புகள் ஒப்புதல் வழங்கலாம். இதில், 5,000 சதுரடி வரையிலான சாதாரண குடியிருப்பு கட்டடங்கள் கட்டுவதற்கு, அனுமதி பெறுவதில் தாமதம் ஏற்படுவதாக, புகார் எழுந்தது.
இவ்வகை கட்டடங்களில் அடிப்படை ஆவணங்கள், வரைபடம் ஆகியவற்றை சரிபார்த்தால் போதும் என்ற நிலையில், இவற்றை எளிமைப்படுத்த அரசு திட்டமிட்டது.
இதையடுத்து, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் போன்று, சுயசான்று முறையில் கட்டட அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, '2,500 சதுரடி நிலத்தில், 3,500 சதுரடி வரையிலான கட்டடங்களுக்கு சுயசான்று முறையில் கட்டட அனுமதி வழங்கப்படும்' என்று, அரசு அறிவித்துள்ளது.
இதில், 'தரைதளத்துடன் முதல் தளம் வரை கட்டுவது' என்ற அடிப்படையில் அனுமதி வழங்க திட்டமிடப்பட்டது. ஆனால், 'வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்கு அடித்தளத்தை அனுமதிக்க வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்தது.
'இதுகுறித்து உரிய முறையில் பரிசீலிக்கப்படும்' என, வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்திருந்தார். அதற்கேற்ப, புதிய நடைமுறைகளை ஏற்படுத்த அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.
இந்திய கட்டுனர், வல்லுனர் சங்கத்தின் தென்னக மைய நிர்வாகி எஸ்.ராமபிரபு கூறியதாவது:
சென்னை மற்றும் பல்வேறு நகரங்களில், வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்துவது சவாலாக உள்ளது. எனவே, தரைதளத்துடன் முதல்தளம் வரை என கட்டடங்களை வரையறுக்கும் போது, அடித்தளத்தை அனுமதிக்கலாம்.
இதனால், அடித்தளத்தை வாகன நிறுத்துமிடமாக பயன்படுத்த வாய்ப்பு ஏற்படும்.
வெள்ள பாதிப்பு காரணமாக பெரும்பாலான பகுதிகளில், 'தரைதளத்தில் வீடு கட்ட வேண்டாம்' என, அறிவுறுத்தப்படுகிறது.
இதை வைத்து தரைதளத்தை வாகன நிறுத்துமிடமாக மாற்றினால், முதல் தளம், இரண்டாம் தளம் என, சுயசான்று முறையில் அனுமதிக்கலாம். இதை அரசு ஏற்றுக்கொண்டதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.