விசாரணையை தள்ளிப்போடக் கேட்ட செந்தில் பாலாஜி மனு மீது 4ல் விசாரணை
விசாரணையை தள்ளிப்போடக் கேட்ட செந்தில் பாலாஜி மனு மீது 4ல் விசாரணை
ADDED : ஆக 28, 2024 08:25 PM
சென்னை:அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவின் இறுதி விசாரணையை, செப்.,4க்கு, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
அ.தி.மு.க., ஆட்சியின்போது, போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்தார். போக்குவரத்து துறையில் பணி நியமனம் பெற்று தருவதாக, பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக, செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து, சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறையும் நடவடிக்கை எடுத்தது. இந்த வழக்கில், கடந்த ஆண்டு ஜூனில் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில், அமலாக்கத் துறை, சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி, செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை, முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களும் பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில், வழக்கில் இருந்து விடுவிக்க மறுத்ததை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனுத் தாக்கல் செய்தார். மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
செந்தில் பாலாஜி தரப்பில், மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் ஆஜராகி, ''ஜாமின் மனு மீது, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க உள்ளது. அதனால், இந்த வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும்,'' என்றார்.
உடனே நீதிபதிகள், 'அந்த வழக்குக்கும், இங்கே உள்ள வழக்குக்கும் சம்பந்தமில்லை. நீண்ட காலத்துக்கு விசாரணையை தள்ளி வைக்க முடியாது. ஏற்கனவே, விசாரணை நீதிமன்றத்திலும் சாட்சிகள் விசாரணை துவங்கி விட்டதாக, அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது' என்றனர்.
அமலாக்கத் துறை சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன் ஆஜராகி, ''இந்த வழக்கில் வாதாட தயாராக உள்ளேன். விசாரணை நீதிமன்றத்தில், சாட்சி விசாரணை துவங்கி விட்டது,'' என்றார்.
இதையடுத்து, வழக்கு விசாரணையை, செப்., 4க்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர். அன்று இறுதி விசாரணை நடக்கும் என்றும், விசாரணை நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணைக்கு எந்த தடங்கலும் இல்லை எனவும், நீதிபதிகள் தெரிவித்தனர்.