கோயில் நிதியில் திருமண மண்டபம் கட்டுமான பணி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
கோயில் நிதியில் திருமண மண்டபம் கட்டுமான பணி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
ADDED : மார் 06, 2025 03:21 AM
மதுரை: தமிழகத்தில் 5 கோயில்களுக்கு கோயில் நிதி மூலம் திருமண மண்டபம் அமைக்கும் அரசாணைக்கு எதிரான வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம் எழுமலை ராம ரவிக்குமார் தாக்கல் செய்த பொதுநல மனு:
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான வாகீஸ்வரர் கோயில், திண்டுக்கல் காளகத்தீஸ்வரர் அபிராமி அம்மன் கோயில் உள்ளிட்ட 5 கோயில்களுக்கு சொந்தமான இடங்களில் ரூ.22 கோடியே 20 லட்சத்தில் திருமண மண்டபங்கள் அமைக்க தமிழக அறநிலையத்துறை 2023 மார்ச் 3 ல் அரசாணை வெளியிட்டது. இப்பணியை அந்தந்த கோயில் நிதி மூலம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் காளகத்தீஸ்வரர் அபிராமி அம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் திருமண மண்டபம் அமைக்கப்படுகிறது. மாநகராட்சியிடம் கட்டட அனுமதி பெறவில்லை.அறநிலையத்துறை சட்டப்படி கோயில் நிதியை நலிவடைந்த கோயில்களில் அறப்பணி மேற்கொள்ள பயன்படுத்தலாம். ஹிந்து மதத்தை பரப்ப மற்றும் கல்வி நிறுவனங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், மருத்துவமனைகள் துவக்க கோயில் நிதியை பயன்படுத்தலாம். இதற்கு முரணாக திருமண மண்டபம் அமைக்க பயன்படுத்துவது விதிமீறலாகும். அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு அறநிலையத்துறை செயலர், கமிஷனர், காளகத்தீஸ்வரர் அபிராமி அம்மன் கோயில் செயல் அலுவலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு ஏப்.,2 க்கு ஒத்திவைத்தது.