யானை வழித்தடம் என கூறி வஞ்சிக்கப்படும் ஹிந்துக்கள்: காடேஸ்வரா குற்றச்சாட்டு
யானை வழித்தடம் என கூறி வஞ்சிக்கப்படும் ஹிந்துக்கள்: காடேஸ்வரா குற்றச்சாட்டு
ADDED : மே 08, 2024 02:05 AM

திருப்பூர்:ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:
'யானை வழித்தடங்களை மறைக்கின்றனர்' என்ற பெயரில் பல கோவில்களுக்கு பக்தர்கள் செல்வதற்கு இடையூறு ஏற்படுத்த சதி நடப்பதாக அறிகிறோம்.
உதாரணமாக, நெல்லை மாவட்டம், அகஸ்தியர் அருவி செல்லும் வழியில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோவில், வனத்துறையின் கட்டுப்பாட்டில் வருவதால் கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு பலகட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
அதுபோல, கோவை மாவட்டத்தில், வீரகாளியம்மன் கோவில், கொடிவேலி அம்மன், பத்ரகாளி அம்மன், பூண்டி வெள்ளிங்கிரி போன்ற கோவில்களுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதிக்கிறது.
ஆனால், அதே பகுதியில் அமைந்துள்ள காருண்யா நிறுவனம் உள்ள பகுதியில் யானை வழித்தடங்கள் காலங்காலமாக உள்ளன.
அதை வனத்துறையும், தமிழக அரசும் கண்டு கொள்ளவில்லை.
தவிர, உலகப்புகழ் பெற்ற மருதமலை கோவிலில் யானை வழித்தடம் என்ற பெயரில் பக்தர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகின்றனர்.
மொத்தம், 1,200 ஏக்கரில் பரந்து விரிந்துள்ள காருண்யா நிறுவனம் யானை வழித்தடத்திற்குள் வராது... ஆனால், பல நுாறு ஆண்டுகளாக லட்சக்கணக்கான ஹிந்துக்கள் வழிபடும் கோவில்கள் மட்டும் யானை வழித்தடத்தில் வரும் என்பது எந்த வகையில் நியாயம்?
தமிழகத்தில் ஹிந்துக்களுக்கு ஒரு சட்டம்; கிறிஸ்துவர்களுக்கு வேறு சட்டமா? யானைகளை பாதுகாக்கிறோம் என்ற பெயரில், ஹிந்துக்களின் உரிமைகளை பறிக்கும் புதிய யானை வழித்தட பரிந்துரையை தமிழக அரசு ஏற்கக்கூடாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

