ADDED : மார் 29, 2024 12:41 AM
நாமக்கல்:தமிழகத்தில் பல்லடம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் 25,000 கறிக்கோழி உற்பத்தி பண்ணை வாயிலாக தினசரி 30 லட்சம் கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்யப்படுகிறது. பண்ணை கொள்முதல் விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு - பி.சி.சி., சார்பில் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது.
கடந்த 1ல் கொள்முதல் விலை ஒரு கிலோ 117 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஏற்ற, இறக்கம் காணப்பட்டு 20ல் 96 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது. இதையடுத்து 22ல் 98, 23ல் 102, 24ல் 107, 25ல் 114 என படிப்படியாக உயர்ந்தது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 11 ரூபாய் அதிகரித்து கொள்முதல் விலை 125 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது.
இதுகுறித்து தமிழக முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:
தமிழகத்தில் தற்போது கோடை வெயிலால் கோழிகள் தீனி உட்கொள்வதையும், தண்ணீர் குடிப்பதையும் தவிர்க்கின்றன. குறிப்பாக 30 முதல் 40 நாளான கோழிகள் ஒரு நாளைக்கு 160 கிராம் தீனி எடுத்துக்கொள்ளும். தற்போது 120 கிராம் மட்டுமே எடுத்துக்கொள்கின்றன. இதனால் 2.500, 2.300 கிலோ இருந்த கோழிகள் தற்போது 1.700 கிலோ, 1.800 கிலோ என எடை குறைந்துள்ளன. வாரம் 2.50 கோடி கிலோ கறி உற்பத்தி செய்த நிலையில் 50 லட்சம் கிலோ குறைந்துள்ளது. அதனால் 30 சதவீதம் கறி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக கொள்முதல் விலை உயர்ந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

