ADDED : ஏப் 26, 2024 09:58 PM
சென்னை:நடிகர் விஷாலுக்கு ஆதரவாக, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் குரல் கொடுத்துஉள்ளார்.
நடிகர் விஷால் நடித்துள்ள, ரத்னம் படத்தை வெளியிடுவதில், சிலர் சிக்கல் ஏற்படுத்தியது தொடர்பாக, விஷால் தன் எக்ஸ் வலைதளத்தில் காட்டமான ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அவருக்கு ஆதரவாக, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் வெளியிட்ட அறிக்கை:
நடிகர் விஷாலின், ரத்னம் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், கட்டப்பஞ்சாயத்து செய்து வெளியிட விடாமல் ஏன் தடுக்க வேண்டும். அரசியலுக்கு வருவேன் என்றால், இதுதான் கதியா. இதுபோன்ற நெருக்கடிகளால், தமிழ் சினிமா மெல்ல மெல்ல தன் இயல்பை இழந்து வருகிறது.
இன்று விஷால் படத்திற்கு என்றால், நாளை தம்பி விஜய் படத்திற்கும் இது தான். தமிழ் சினிமாவிற்கும் இது தான். அந்த ஒருவர் நினைக்கும் படம் மட்டும் தான், தமிழ் சினிமாவில் திரையிடப்பட வேண்டும் என்று அதிகார திமிரில் ஆடுகின்றனர்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

