சட்டம் ஒழுங்கு சரியில்லை என பொய் பேசும் இ.பி.எஸ்: அமைச்சர் ரகுபதி
சட்டம் ஒழுங்கு சரியில்லை என பொய் பேசும் இ.பி.எஸ்: அமைச்சர் ரகுபதி
ADDED : டிச 20, 2024 07:05 PM

சென்னை; நெல்லை படுகொலையில் 4 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டு உள்ள நிலையில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற பொய்யை எதிர்க்கட்சித் தலைவர் பாடத்தொடங்கியிருக்கிறார் என்று சட்ட அமைச்சர் ரகுபதி கூறி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;
திருநெல்வேலி மாவட்டம் கீழநத்தத்தை சேர்ந்த மாயாண்டி என்பவர் கொலை வழக்கு ஒன்றில் ஆஜராகி திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்திற்கு வரும் வழியில், நீதிமன்றத்திற்கு வெளியே கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் நடந்த போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கொலையாளிகளை விரட்டி சென்று ஒருவரை மடக்கிப்பிடித்துள்ளனர். காரில் தப்பி சென்ற மற்றவர்களையும் கொலை நடந்த இரண்டே மணி நேரத்தில் தமிழக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வளவு துரிதமாக செயல்பட்டு கொலையாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டதை பொறுக்க முடியாமல், வழக்கம் போல சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற புழுத்துப்போன பொய்யை பாடத்தொடங்கியிருக்கிறார் எதிர்க்கட்சித்தலைவர்.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது தூத்துக்குடியில் வாழ்வாதார உரிமைக்காக போராடிய அப்பாவி மக்கள் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூரத்தை; மறுநாள் காலையில் டி. வி.,யில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என நா கூசாமல் பொய் சொன்ன எடப்பாடி பழனிசாமிக்கு சட்டம் ஒழுங்கு பற்றி பேச எந்த தகுதியும் இல்லை.
சாத்தான்குளம் தந்தை-மகன் அடித்துக் கொலை, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை, கொடநாடு கொலை சம்பவம் என பொதுமக்கள் வெளியில் நடமாடவே அச்சப்படும் சூழலில் தமிழகம் தவித்துக் கிடந்ததை மறந்து விட்டீர்களா பழனிசாமி?
ஒன்றிய அரசின் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டிருக்கும் புள்ளி விவரங்கள் அ.தி.மு.க., ஆட்சியில் குற்றச்செயல்கள் பல்கிப் பெருகிக் கிடந்ததை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. அதன்படி 2020ம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகளின் எண்ணிக்கை 8,91,700 ஆகும். 2022ம் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை 1,93,913 என மேலும் குறைக்கப்பட்டுள்ளது. இந்தத் தரவுகளை பார்க்கும் போதே மலைக்கும் மடுவுக்குமான வேறுபாட்டை எவராலும் எளிதில் புரிந்து கொள்ள முடியும் ஆனால் ஒருவருக்கு மட்டும் புரியவே புரியாது அவர் தான் பழனிசாமி.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்,