ADDED : பிப் 21, 2025 06:43 PM
சென்னை:'தமிழை அடிப்படையாக வைத்து, பல மொழிகள் கற்போம்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
நம் எண்ணம், படைப்பாற்றல், தாய் மொழி வாயிலாகவே நடக்கிறது. மனிதன் பேசும் மொழியில், கல்வி கற்பிக்கப்பட்டால், சிந்தனைத்திறன் பெருகும். ஆகையால், அடிப்படைக் கல்வி என்பது, தாய்மொழியில் கற்பிக்கப்பட வேண்டியது கட்டாயம். உலக நாடுகள் கூட்டமைப்பான யுனெஸ்கோ, தாய்மொழி வழியிலான பன்மொழி கற்றலை வலியுறுத்துகிறது. தாய்மொழியில் கற்பது அடிப்படை உரிமை என்றும் தெரிவித்துள்ளது.
இதன்படியே, பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள, புதிய கல்விக் கொள்கை, ஐந்தாம் வகுப்பு வரை, தாய்மொழியில் அடிப்படை கல்வியை வலியுறுத்துகிறது. இன்றைய டிஜிட்டல் உலகில், மொழிகளை இணைப்பதும், பல மொழிகள் கற்கும் வாய்ப்பை உருவாக்குவதும் இன்றிமையாதது. நம் தாய் மொழியாம் தமிழை அடிப்படையாக வைத்து, பல மொழிகள் கற்போம். தமிழ் மொழியின் பெருமையை உலகறிய செய்வோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

