ADDED : ஏப் 16, 2024 06:39 AM

அகஸ்தியர்பட்டி : ''தி.மு.க., முகத்தில் கரியை பூச வேண்டும்; பா.ஜ.,வுக்கு பெருவாரியான வெற்றியை பெற்றுத் தர வேண்டும்; அதற்கான நம்பிக்கை எனக்கு வந்து விட்டது,'' என பிரதமர் மோடி பேசினார்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர்பட்டியில் பா.ஜ., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் மோடி பேசியதாவது: வரலாற்று பெருமைமிக்க நெல்லையில், இந்த பிரசார கூட்டத்தைப் பார்த்ததும் தி.மு.க.,வுக்கும், காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணிக்கும் துாக்கம் தொலைந்து போயிருக்கும்.
'புல்லட்' ரயில்
தமிழ் புத்தாண்டில் தான் தேர்தல் அறிக்கையை பா.ஜ., வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தின் முன்னேற்றத்துக்கான பல நல்ல திட்டங்களை தெரிவித்துள்ளோம்.
நெல்லை- - சென்னை இடையே 'வந்தே பாரத்' ரயில் ஓடுகிறது. இதனால், இந்தப் பகுதி மக்கள் முன்னேற்றம் காண்கின்றனர். வெகு விரைவில், தெற்கிலும் 'புல்லட்' ரயிலை துவங்க திட்டமிட்டுள்ளோம். புதிய அரசு வந்த உடன், அதற்கான பணிகள் துவங்கும்.
தமிழ் மொழியையும், தமிழ் கலாசாரத்தையும் நேசிக்கும் தமிழக மக்கள், பா.ஜ.,வையும் நேசிக்க துவங்கி விட்டனர். தமிழ் மொழிக்கு உலகின் அங்கீகாரத்தை பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளோம். திருவள்ளுவர் பண்பாட்டு மையம் என்ற பெயரில் கலாசார மையம், உலகம் முழுதும் ஏற்படுத்தப்படும்.
தேசப்பற்று
தி.மு.க.,வும், காங்கிரசும் எப்படி நடந்து கொள்கின்றன என்று பாருங்கள். அவர்களின் சித்தாந்தமே வெறுப்பாலும், எதிர்ப்பாலும் உருவாக்கப்பட்டது.
அவர்கள் தமிழின் அடையாளத்தையும், பண்பாட்டையும், திராவிடத்தின் பெயரால் அழிக்க நினைக்கின்றனர். செங்கோலாக இருந்தாலும், ஜல்லிக்கட்டாக இருந்தாலும் அதை எப்படி எதிர்த்தனர் என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும்.
தென் மாவட்டங்களில் உள்ள இந்தப் பகுதியில் வீரமும், தேசப்பற்றும் பொங்குகின்றன. வ.உ.சி.,யை நினைத்துப் பார்க்கிறேன். அவர் எங்களுக்கு உத்வேகம் கொடுக்கிறார். அதனால் தான், பாதுகாப்பு துறையில் இந்தியா உத்வேகம் பெற்றுள்ளது.
அவமதிக்கின்றன
தேச பக்தியும், நேர்மையும் உடைய காமராஜரை பின்பற்றி, பா.ஜ., இன்று நேர்மையான அரசியலை முன்னெடுத்து செல்கிறது. காங்கிரசும், தி.மு.க.,வும் காமராஜரை தொடர்ந்து அவமதித்து வந்திருக்கின்றன. எங்கள் லட்சியம் துாய்மையான அரசியல். எம்.ஜி.ஆரின் கனவுகளை தமிழகத்தில் பா.ஜ., முன்னெடுத்து செல்கிறது.
அவரின் பாரம்பரியத்தை தி.மு.க., தொடர்ந்து அவமதிக்கிறது. ஜெயலலிதாவை தி.மு.க., நடத்திய விதம், சட்டசபையில் அவர் அவமதிக்கப்பட்ட விதத்தை மறக்க முடியாது. தி.மு.க.,- - காங்கிரஸ் கூட்டணி எவ்வளவு தேச விரோத செயல்களை செய்துள்ளது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். கச்சத்தீவை நம்மிடம் இருந்து துண்டித்து வேறு நாட்டுக்கு கொடுத்தனர்.
திரைமறைவில் ரகசியமாகச் செய்த அந்த வரலாற்றுப் பிழையை மன்னிக்க முடியாத பாவமாக பார்க்கிறேன். அவர்களின் பாவத்துக்காக நம் மீனவர்கள் தண்டிக்கப்படுகின்றனர். இதை சமீபத்தில் பா.ஜ., ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியது. தமிழகம் போதையை நோக்கி போய் கொண்டிருக்கிறது. குடும்ப அரசியலில் உள்ளவர்கள், போதை மருந்துகளை ஊக்குவிக்கின்றனர். தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை எண்ணி, பெற்றோர் கவலைப்படுகின்றனர். அவர்களின் குழந்தைகள் போதை என்ற நரகத்துக்குள் தள்ளப்படுகின்றனர். இதைத் தடுப்போம்.
இன்று உங்கள் முன், நான் நிற்கும் பிரசாரக் கூட்டம் தான், தமிழக மக்களை இப்போதைக்கு சந்திக்கும் கடைசி கூட்டமாக இருக்கும். தேர்தல் நெருங்குவதால், இன்னொரு முறை சந்திக்க முடியும் என்று நினைக்க முடியவில்லை. எனக்கு மீண்டும் ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள்.
தமிழகத்தில் பா.ஜ., எங்கே உள்ளது என இண்டி கூட்டணியினர் கேட்டனர். அவர்கள் அதிர்ச்சியடையும் வகையில், மிகப்பெரிய ஆதரவை வழங்கப் போகிறீர்கள். தி.மு.க.,வினர் முகத்தில் கரியை பூச வேண்டும். அவர்களிடம் ஒரு டேப் ரிக்கார்டர் உள்ளது. அதில், 'பா.ஜ., வந்து விடும்; ஹிந்தி வந்து விடும்' என, பழைய பாட்டையே போடுகின்றனர்.
ஏப்ரல் 19ம் தேதியன்று தேர்தல் நடக்கப்போகிறது. இதில், பா.ஜ., மிகப்பெரிய வெற்றியை பெறப் போகிறது. அந்த நம்பிக்கை எனக்கு வந்து விட்டது. ஆட்சியில் உள்ள தி.மு.க., அரசுக்கு பயமும், பதற்றமும் வந்துவிட்டது. பா.ஜ.,வுக்கான உங்கள் ஆதரவை கண்டு பயப்படுகின்றனர். அதனால், பிரசாரத்தை தடுக்க துவங்கி விட்டனர். பா.ஜ., தொண்டர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன். மொத்த தமிழகமும், நானும் உங்களுடன் இருக்கிறேன். உங்கள் பிரசாரத்தை துணிச்சலுடன் முன்னெடுக்கலாம். இவ்வாறு மோடி பேசினார்.

