ADDED : பிப் 27, 2025 01:52 AM
ஒட்டன்சத்திரம்:திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே நாலுபுளிக்கோட்டையில் பரிகாரம் செய்யவில்லை என்றால் உயிர்பலி ஏற்படும் எனக் கூறி பெண்ணிடம் ஒரு பவுன் நகையை பறித்து சென்றவரை போலீசார் கைது செய்தனர்.
நாலுபுளிக்கோட்டையைச் சேர்ந்தவர் மகேஷ்வரி 45. இவரது கணவர் சேகர் 20 நாட்களுக்கு முன் இறந்து விட்டார். 6 நாட்களுக்கு முன் வீட்டிற்கு வந்த வந்த குறி சொல்பவர் 'உங்கள் வீட்டில் இன்னொரு உயிரை காளி காவு வாங்க உள்ளது. பரிகாரம் செய்தால் தடுக்க முடியும்'' எனக் கூறி உள்ளார்.
அதனால் வீட்டுக்குள் சென்று மகேஷ்வரி மகள் ஆனந்தியை வெளியே போக கூறிவிட்டு பூஜைகள் செய்துள்ளார்.
பூஜையில் தங்க நகை வைக்க வேண்டும் என அவர் கூற மகேஷ்வரி, தோடு, காதுமாட்டி உள்ளிட்ட ஒரு பவுன் நகையை வைத்துள்ளார். மஞ்சள், உப்பு எடுத்து வருமாறு கூறி உள்ளார்.
சமையல் அறைக்கு சென்று எடுத்து வருவதற்குள் நகையுடன் அந்த நபர் தப்பினார்.
ஒட்டன்சத்திரம் போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக கோவிலுார் செல்லக்குட்டியூரை சேர்ந்த மணிகண்டனை 35, கைது செய்து நகையை மீட்டனர்.

