மொபைல் எண் வாயிலாக ரூ.3 லட்சம் நுாதன மோசடி வாங்காத கடனுக்கு வங்கியில் இருந்து 'நோட்டீஸ்'
மொபைல் எண் வாயிலாக ரூ.3 லட்சம் நுாதன மோசடி வாங்காத கடனுக்கு வங்கியில் இருந்து 'நோட்டீஸ்'
ADDED : ஆக 16, 2024 01:05 AM

சென்னை:புதிதாக வாங்கிய மொபைல் போன் எண் வாயிலாக, ஆள் மாறாட்டம் செய்து, 3 லட்சம் ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 43, சென்னை கிழக்கு மண்டல 'சைபர் கிரைம்' போலீசில் அளித்த புகார்:
மயிலாப்பூர் எச்.டி.எப்.சி., வங்கியில், 2006ல் சம்பள கணக்கு துவக்கினேன். 2009ல் பணி மாறுதல் காரணமாக அமெரிக்கா சென்று விட்டேன். வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருந்த என் மொபைல் போன் எண்ணை எனக்கு தெரியாமல், 2021 ஜூலையில் வேறு ஒருவர் புதிதாக வாங்கியுள்ளார்.
பின், என் வங்கி கணக்கில் 3 லட்சம் ரூபாய் தனிநபர் கடன் பெற்றுள்ளார். புதிதாக, 'டெபிட் கார்டு' என்ற சேமிப்பு அட்டை வாங்கி, வங்கி கணக்கில் இருந்த தொகையையும் எடுத்துள்ளார்.
இந்நிலையில், நான் வாங்காத கடனிற்கு, என் நிரந்தர முகவரியான சேலத்தில் உள்ள வீட்டிற்கு வங்கி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
என்னை போல ஆள்மாறாட்டம் செய்து, மோசடியில் ஈடுபட்டவரை கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு புகாரில் கூறப்பட்டிருந்தது.
இப்புகாரின் அடிப்படையில், சென்னை கிழக்கு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்தனர். விசாரணையில் இந்த நுாதன மோசடியில் ஈடுபட்டது, செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கத்தைச் சேர்ந்த ராஜ்கமல், 37, என தெரியவந்தது. அவரை நேற்று கைது செய்த போலீசார், அவரிடமிருந்து மொபைல் போனை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.