பாஸ்போர்ட் பெற நிபந்தனை மத்திய அரசுக்கு 'நோட்டீஸ்'
பாஸ்போர்ட் பெற நிபந்தனை மத்திய அரசுக்கு 'நோட்டீஸ்'
ADDED : ஏப் 20, 2024 10:24 PM
சென்னை:பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் பாலின மாற்று அறுவைச் சிகிச்சை செய்தவர்கள், மருத்துவச் சான்றிதழை தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதியை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கு பதில் அளிக்க, மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பாலின மாற்று அறுவைச் சிகிச்சை செய்தவர்கள், பாஸ்போர்ட் பெற வேண்டும் என்றால், தாங்கள் அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவச் சான்றிதழ் சமர்பிக்க வேண்டும் என பாஸ்போர்ட் விதிமுறைகளில் கூறப்பட்டு உள்ளது.
இந்த விதிமுறையை எதிர்த்து, சென்னையைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில் “அறுவைச் சிகிச்சை வாயிலாக மூன்றாம் பாலினத்தவராக மாறுவோர், பாஸ்போர்ட் பெற வேண்டும் என்றால், மருத்துவச் சான்றிதழ் இணைக்க வேண்டும் என்ற விதிமுறை, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. இந்த விதிமுறையை ரத்து செய்ய வேண்டும்,” என, கூறியிருந்தார்.
இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி சத்யநாராயண பிரசாத் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணை வரும் 29க்கு ஒத்திவைக்கப் பட்டது.

