சுற்றுலா அழைத்து செல்லாத நிறுவனம் ரூ.67,000 இழப்பீடு தர உத்தரவு
சுற்றுலா அழைத்து செல்லாத நிறுவனம் ரூ.67,000 இழப்பீடு தர உத்தரவு
ADDED : ஆக 12, 2024 05:27 AM
சென்னை : கட்டணம் வசூலித்தும் சுற்றுலா அழைத்துச் செல்லாமல் ஏமாற்றிய, கோவை மாவட்டத்தை சேர்ந்த தனியார் நிறுவனம், வாடிக்கையாளருக்கு கட்டணத்தை திரும்ப வழங்குவதுடன், 10,000 ரூபாய் இழப்பீடும் தர வேண்டும் என, சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த டாக்டர் ஸ்ரீகிருஷ்ண பிரசாந்த் தாக்கல் செய்த மனு:
கோவை மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில், 'ஹாலிடே ஹப் டூர்ஸ் அண்டு டிராவல்ஸ்' என்ற சுற்றுலா நிறுவனம் உள்ளது. நானும், மனைவியும், பாலி மற்றும் இந்தோனேசியாவுக்கு சுற்றுலா செல்ல, அந்த நிறுவனத்தை அணுகினோம்.
ஆறு நாள் சுற்றுலாவுக்கு, ஒரு லட்சத்து, 7,894 ரூபாய் கட்டணமாக செலுத்தினோம். ஆனால் உறுதியளித்தபடி, சுற்றுலா செல்ல விமான டிக்கெட்டுகளை நிறுவனம் முன்பதிவு செய்து தரவில்லை. விளக்கம் கேட்டும் உரிய பதில் இல்லை. கட்டணத்தையும் திருப்பி தரவில்லை.
பின், மற்றொரு நிறுவனம் வாயிலாக, 1.60 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தி, சுற்றுலா சென்று திரும்பினேன். நோட்டீஸ் அனுப்பியதும், 25,000 ரூபாயை திருப்பி அளித்தனர்.
சுற்றுலா நிறுவனம் தர வேண்டிய மீதி, 82,984 ரூபாயை வழங்க உத்தரவிட வேண்டும். சேவை குறைபாடுக்கு, 75,000 ரூபாய்; மன உளைச்சல் மற்றும் வழக்கு செலவுக்கு 15,000 ரூபாயை வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த சென்னை வடக்கு நுகர்வோர் நீதிமன்ற தலைவர் பி.ஜிஜா, உறுப்பினர்கள் கவிதா கண்ணன், வி.ராமமூர்த்தி அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
சுற்றுலா நிறுவனம் உறுதி அளித்தபடி சேவை வழங்காமல், நியாயமற்ற வணிக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
சேவை குறைபாடுடன் நடந்த நிறுவனம், பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய, 82,894 ரூபாய்; மற்றொரு நிறுவனத்தை தேர்வு செய்து, சுற்றுலா சென்றதால் ஏற்பட்ட கூடுதல் செலவு, 52,016 ரூபாய்; மன உளைச்சலுக்கு 10,000 ரூபாய்; வழக்கு செலவுக்கு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்.
இத்தொகையை இரு மாதத்துக்குள் வழங்கவில்லை என்றால், 9 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

