ADDED : ஆக 21, 2024 09:33 PM
சென்னை:'ஆவின் பால் பண்ணையில் பாதுகாப்பு விவகாரத்தில், மெத்தனப் போக்குடன் தி.மு.க., அரசு செயல்பட்டதால், பெண் ஊழியர் உமாராணி பலியானார்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
திருவள்ளூர் மாவட்டம், காக்களூரில் உள்ள ஆவின் பால் பண்ணையில் பணிபுரிந்து வந்த உமாராணி என்ற பெண் ஊழியர், 'கன்வேயர் பெல்டில்' துணி, தலைமுடி சிக்கியதால் பரிதாபமாக உயிரிழந்தார். பால் பண்ணை ஊழியர்கள் ஆபத்தான இயந்திரங்களுக்கு இடையில் பணிபுரியும்போது, அவர்களுக்கான பாதுகாப்பை ஆவின் நிர்வாகம் உறுதி செய்திருக்க வேண்டும்.
ஆனால், தி.மு.க., ஆட்சியில், பட்டாசு ஆலை முதல் பால் பண்ணை வரை, எங்குமே தொழிலாளிகளுக்கு பாதுகாப்பு என்பதே இல்லை. பாலில் ஒரு முடி கூட உதிரக்கூடாது என்பதே, ஆவின் நிறுவனத்தின் பாதுகாப்பு நெறிமுறை. ஆனால், முறையான பாதுகாப்பு வசதிகளை, இந்த அரசு ஏற்படுத்தித் தராததன் விளைவாகவே, இன்றைக்கு ஒரு பெண் தொழிலாளி தன் தலைமுடி சிக்கி, தலை துண்டிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்.
பாதுகாப்பு விவகாரத்தில், மெத்தனப் போக்குடன் செயல்படும் தி.மு.க., அரசுக்கு கண்டனத்தை தெரிவிக்கிறேன்.
உமாராணியின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.