ADDED : ஏப் 24, 2024 02:00 AM

சென்னை:'தேர்தல் பிரசாரத்திற்காக, கண்ணியம் தவறி மத துவேஷ கருத்துக்களை யார் பேசினாலும், அது இந்திய இறையாண்மைக்கு எதிரானது. இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
பிரதமர் மோடி, ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது, முஸ்லிம் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார். இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு.
ஓட்டு வங்கி அரசியலுக்காக, அரசியல் கட்சி தலைவர்களும், நாட்டின் உயர் ஆட்சிப் பதவியில் உள்ள பிரதமரும், இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது, இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல.
முஸ்லிம் மக்களுடைய மனது புண்படும்படி, இதுபோன்ற கருத்துக்களை தெரிவிப்பது ஏற்புடையதல்ல. அரசியல் கட்சி தலைவர்களும், ஆட்சி அதிகாரத்தில், உயர் பதவியில் உள்ளவர்களும், இதுபோன்ற கருத்துக்களை தவிர்ப்பது, நாட்டின் நலனுக்கும், மத நல்லிணக்கத்திற்கும் நல்லது.
அரசியல்கட்சி தலைவர்களின் இதுபோன்ற சர்ச்சை கருத்துக்கள், சிறுபான்மையின மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், மத உணர்வுகளை துாண்டும் விதமாகவும் அமைகிறது.
தேர்தல் பிரசாரத்திற்காக, கண்ணியம் தவறிய, இது போன்ற மத துவேஷ கருத்துக்களை, யார் பேசினாலும், அது இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். நாட்டின் நலனுக்காக, இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

