பாதுகாப்புக்காக அரசியல் கட்சிகளில் சேரும் ரவுடிகள்: கார்த்தி எம்.பி.,
பாதுகாப்புக்காக அரசியல் கட்சிகளில் சேரும் ரவுடிகள்: கார்த்தி எம்.பி.,
ADDED : ஜூலை 20, 2024 03:11 AM
சிவகங்கை : ''சமீப காலமாக அரசியல் கட்சிகளில் ரவுடிகள் இல்லை. ரவுடிகள் தான் பாதுகாப்புக்காக அரசியல் கட்சிகளில் சேர்ந்து வருகின்றனர்,'' என, சிவகங்கையில் காங்., எம்.பி., கார்த்தி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: அனைத்து அரசியல் கட்சிகளும் புதிதாக கட்சியில் சேருபவர் குறித்தும், அவருக்கு பதவி வழங்கும் போது அவரது பின்னணி குறித்தும் விசாரிக்க வேண்டும். பல கொலை வழக்குகளில் உண்மைகளை மறைக்கும் நோக்கத்துடன் போலீசார் என்கவுன்டர் செய்வதாக சந்தேகம் எழுகிறது. கூலிப்படை மூலம் நடக்கும் கொலைகளை போலீசாரால் தடுக்க முடியும். கூலிப்படை மூலம் நடக்கும் கொலைக்கு போலீசார் பதில் சொல்ல வேண்டும்
தேர்தல் பத்திரம் மூலம் வந்த பணத்தை திரும்ப கொடுங்கள் என உச்சநீதிமன்றம் கூறியிருந்தால் நல்ல தீர்ப்பாக இருந்திருக்கும். இனிமேல் வாங்க வேண்டாம் என கூறியதை ஏற்க முடியாது. தமிழகத்திற்கு காவிரியில் இருந்து எப்படி தண்ணீர் பெற வேண்டும் என்பதை காவிரி மேலாண்மை வாரியம் தான் அறிந்து செயல்பட வேண்டும். தற்போது நல்ல மழை பெய்வதால் கர்நாடகா அரசு தானாக தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும்.
மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு
மின் வாரியத்தை சீரமைக்க வேண்டும். மின்வாரியம் மீது கடன் சுமை உள்ளது. இக்கடன் சுமையை குறைக்கும் வரை மின்வாரியத்தை சீரமைக்க முடியாது. காங்., தொண்டர்களை மாநில தலைவர் சந்திப்பது நல்ல விஷயம். மக்கள் பிரச்னையை முன்னிறுத்தி குரல் கொடுக்க வேண்டும் என்றார்.

