பழநியில் ஆக்கிரமிப்பு அகற்றம்: உயர்நீதிமன்றத்தில் கலெக்டர் ஆஜர்
பழநியில் ஆக்கிரமிப்பு அகற்றம்: உயர்நீதிமன்றத்தில் கலெக்டர் ஆஜர்
ADDED : ஜூலை 02, 2024 09:44 PM
மதுரை : திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கிரி வீதி ஆக்கிரமிப்பு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கலெக்டர் பூங்கொடி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜரானார். ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டதாக அரசு தரப்பு அறிக்கை தாக்கல் செய்தது.
சென்னை ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் மலையடிவாரத்தில் கிரி வீதிகளில் ஆக்கிரமிப்புகளால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.
ஆக்கிரமிப்புகளை அகற்ற 2018ல் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை நிறைவேற்றாததால் அப்போதைய கலெக்டர் வினய் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள் அமர்வு, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை கண்காணிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி வி.பாரதிதாசன் தலைமையில் குழு அமைத்தும், அரசு தரப்பில் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. அதனடிப்படையில் அவ்வப்போது நீதிபதிகள் அமர்வு உத்தரவு பிறப்பிக்கிறது.
கடந்த வாரம் நீதிபதிகள்,'ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஜூலை 2 ல் திண்டுக்கல் கலெக்டர் ஆஜராக வேண்டும்,' என உத்தரவிட்டனர்.
நேற்று நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரித்தது. கலெக்டர் பூங்கொடி ஆஜரானார்.
அரசு தரப்பு: ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 169 வீடுகள் அகற்றப்பட்டுள்ளன எனக்கூறி அறிக்கை தாக்கல் செய்தது.
நீதிபதிகள்: நீதிபதி பாரதிதாசன் குழு ஜூலை 13 ல் ஆய்வு செய்கிறது. கோரிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மனு அளிக்கலாம். கிரி விதியை சுற்றிலும் கட்டடங்கள் உள்ளன. அவற்றிற்கு அனுமதி பெறப்பட்டுள்ளதா, இல்லையா, விதிமீறல்கள் உள்ளனவா என ஜூலை 29 ல் கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.