ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கு; சிறப்பு எஸ்.ஐ.,க்களுக்கு ஜாமின்
ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கு; சிறப்பு எஸ்.ஐ.,க்களுக்கு ஜாமின்
ADDED : மார் 11, 2025 12:46 AM

சென்னை : சென்னையில், வழிப்பறி வழக்கில் கைதான சிறப்பு எஸ்.ஐ.,க்களுக்கு, நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ராயபுரத்தை சேர்ந்தவர் தமீம் அன்சாரி. இவரிடம் இருந்து, சிறப்பு சப் -- இன்ஸ்பெக்டர்கள் ராஜா சிங், ஸன்னிலாய்ட், வருமான வரித்துறை அதிகாரிகள் தாமோதரன், பிரதீப், பிரபு ஆகியோர், கடந்த ஆண்டு, 20 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்தனர்.
இதுகுறித்து, ஆயிரம் விளக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து, அனைவரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஜாமின் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில், சிறப்பு எஸ்.ஐ.,க்கள் ராஜா சிங், ஸன்னிலாய்ட் ஆகியோர், தனித்தனியே மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள், நீதிபதி சுந்தர் மோகன் முன், நேற்று விசாரணைக்கு வந்தன.
மனுதாரர்கள் தரப்பில், வழக்கறிஞர்கள் ஆர்.விவேகானந்தன், ராஜ்குமார் ஆகியோர் ஆஜராகி, ''பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நபர், எந்த புகாரும் அளிக்காத நிலையில், வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டுமே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 70 நாட்களுக்கு மேலாக சிறையில் உள்ளனர்,'' என்றனர்.
காவல் துறை தரப்பில், கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞர் லியோனார்ட் அருள் செல்வம் ஆஜராகி, ''மனுதாரர்கள் இருவரும் வழக்கில் முக்கிய நபர்கள் என்பதால், ஜாமின் வழங்கக்கூடாது. அவர்கள் அளித்த தகவல் அடிப்படையில் தான், மிரட்டி பணம் பறித்த சம்பவம் நடந்துஉள்ளது.
''விசாரணையில், இதே போன்ற எட்டு குற்ற சம்பவங்களில், அவர்கள் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பை வழங்கவில்லை. ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்,'' என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரர்கள் ராஜாசிங், ஸன்னி லாய்ட் ஆகியோர், சம்பந்தப் பட்ட போலீஸ் நிலையத்தில், தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன், ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.