ADDED : ஜூலை 04, 2024 11:08 PM
சென்னை:சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத் துறையால் கடந்தாண்டு ஜூனில் கைது செய்யப்பட்ட, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, புழல் சிறையில் உள்ளார்.
அமலாக்கத்துறை வழக்கில் இருந்து, தன்னை விடுவிக்க கோரிய மனு மீதான உத்தரவை தள்ளி வைக்க வேண்டும்; ஆவணங்கள் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளோம்; விடுபட்ட ஆவணங்களை வழங்க உத்தரவிட வேண்டும் என, செந்தில் பாலாஜி தரப்பில், புதிதாக மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள், நீதிபதி எஸ்.அல்லி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் மா.கவுதமன் ஆஜராகி, தன் வாதங்களை நிறைவு செய்தார். அந்த மனுக்கள் மீது வரும் 8ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும்; விசாரணையை தள்ளிவைக்க கோரிய மனு மீது, அன்றைய தினம் செந்தில் பாலாஜி தரப்பு வாதங்களை முன் வைக்கலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை, 43வது முறையாக, வரும் 8ம் தேதி வரை நீட்டித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.