ADDED : ஏப் 14, 2024 04:53 AM

பண்ருட்டி: பண்ருட்டி அருகே பாம்பை பிடித்த தன்னார்வலர், பாம்பு கடித்து இறந்தார்.
கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் புதுத்தெருவை சேர்ந்தவர் அப்துல்சமத் மகன் உமர்அலி, 36; பாம்புபிடி தன்னார்வலரான இவர் கடந்த ஒன்றரை ஆண்டாக வனம் மற்றும் தீயணைப்பு துறையினருடன் இணைந்து பண்ருட்டி, நெல்லிக்குப்பம் பகுதிகளில் வீடுகளில் புகும் பாம்புகளை பிடித்து காப்பு காட்டில் விட்டு வந்தார்.
நேற்று முன்தினம் இரவு 7:30 மணிக்கு பண்ருட்டி அடுத்த எல்.என்.புரம் முத்தையா நகரில் ஒரு வீட்டில் விஷ பாம்பு புகுந்தது. அதனை உமர் அலி தீயணைப்புதுறை உதவியுடன் பிடித்து டப்பாவில் அடைக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக அந்த பாம்பு, உமர் அலியை கடித்தது.
உடன் உமர் அலியை, தீயணைப்பு வீரர்கள் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்த பின் மேல்சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை டாக்டர் பரிசோதித்தபோது ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தார். இறந்த உமர்அலிக்கு பரகத்நிஷா என்ற மனைவியும், இரு குழந்தைகள் உள்ளனர்.
பண்ருட்டி போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

