'ஆணவ குற்றங்களை கட்டுப்படுத்த சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்'
'ஆணவ குற்றங்களை கட்டுப்படுத்த சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்'
ADDED : ஜூன் 27, 2024 02:33 AM
சென்னை:'தமிழகத்தில் ஆணவக் குற்றங்களை கட்டுப்படுத்த சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்றவேண்டும்' என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
ஆணவக் குற்றங்களை தடுக்க, உச்ச நீதிமன்ற ஆலோசனைப்படி, 2012ம் ஆண்டு இந்திய சட்ட ஆணையம், சட்டவிரோத கூட்டம் (திருமண சுதந்திரத்தில் தலையிடுதல்) தடுப்புச் சட்டம் என்ற சட்ட மசோதாவை உருவாக்கியது. அந்த மசோதாவை சட்டமாக்காமல், மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ளது.
கடந்த 2018ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பபில், 'ஆணவக் கொலைகளை தடுக்க, மத்திய அரசு சிறப்பு சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும்' என்றும், அதுவரை, மத்திய அரசும், மாநில அரசுகளும் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் பட்டியலிட்டிருந்தது.
உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட நெறிமுறைகளை, கடந்த அதி.மு.க., அரசும் நடைமுறைப்படுத்தவில்லை. தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், முதல்வர் ஸ்டாலினிடம் கடிதம் வாயிலாக சுட்டிக் காட்டினோம்.
தற்போது, திருநெல்வேலி மார்க்சிஸ்ட் கம்யூ., மாவட்ட அலுவலகத்தை ஜாதி ஆணவக் குற்றவாளிகள் தாக்கியுள்ளனர். எனவே, ஜாதி ஆணவக் குற்றங்களைத் தடுப்பதற்கான சிறப்புச் சட்டத்தை, தமிழக அரசு இயற்ற வேண்டும். அதுவரை, உச்ச நீதிமன்றம் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளை செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.