UPDATED : மார் 12, 2025 03:57 PM
ADDED : மார் 12, 2025 12:45 PM

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே தந்தை திடீரென இறந்த நிலையில், அவரது உடலை வணங்கி விட்டு மகள் பிளஸ் 2 தேர்வு எழுதச் சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை இட்டமொழி அருகே வடலிவிளையைச் சேர்ந்தவர் அய்யாதுரை, 52; கூலி தொழிலாளி. இவரது மனைவி பானுமதி.
இவர்களுக்கு மூன்று மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மகள் மதுமிதா இட்டமொழி ஏ.வி.ஜோசப் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். அய்யாதுரை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று அதிகாலை இறந்தார். மதுமிதாவிற்கு நேற்று கணிதத்தேர்வு நடந்தது. தந்தை இறந்த நிலையில், குளிரூட்டி பெட்டியில் வைக்கப்பட்ட அவரது உடலை கண்ணீர் மல்க வணங்கிவிட்டு, மதுமிதா கனத்த இதயத்துடன் தேர்வெழுத பள்ளிக்கு சென்றார்.
இதைப் பார்த்து உறவினர்களும், கிராம மக்களும் நெகிழ்ந்தனர். இந்தாண்டு பிளஸ் 2 தமிழ் தேர்வன்று வள்ளியூரைச் சேர்ந்த மாணவர் சுனில்குமாரின் தாய் சுபலெட்சுமி இறந்த நிலையில், அவரும் தன் தாய் உடலை வணங்கிவிட்டு, தேர்வெழுதச் சென்றது குறிப்பிடத்தக்கது.
அதே போல, ராமநாதபுரம், வனசங்கரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த தாய் அமுதா உடல்நிலை பாதித்து நேற்று அதிகாலை இறந்த நிலையில், அவரது மகள்பிரியதர்ஷினிதேர்வுஎழுதினார்.