கந்து வட்டிக்கு வழக்கு பதிய தாமதமானதால் திடீர் மறியல்
கந்து வட்டிக்கு வழக்கு பதிய தாமதமானதால் திடீர் மறியல்
ADDED : ஏப் 07, 2024 11:22 PM
ராமேஸ்வரம் : ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் தெற்கு கரையூர் பரமேஸ்வரன் மனைவி முனீஸ்பிரியா, 28. இவர், அதே பகுதியை சேர்ந்த நம்புசரவணனிடம், 2.20 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
இதற்கு அதிக வட்டி செலுத்திய நிலையில், சமீபத்தில், 2.20 லட்சம் ரூபாயை திருப்பிக் கொடுத்தார்.
அதில், 40,000 ரூபாய் வட்டி பாக்கி இருந்ததாகவும், இதை நம்பு சரவணன், 45, அவரது மனைவி நம்பு சுகன்யா, 38, தாய் சொர்ணம், 60, உறவினர்கள் ராணி, 55, நம்புசெல்வி, 52, ஆகியோர் முனீஸ்பிரியாவிடம் கேட்டு தகராறு செய்து தரக்குறைவாக பேசினர்.
வேதனையடைந்த முனீஸ்பிரியா தற்கொலைக்கு முயன்றார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
முனீஸ்பிரியா உறவினர்கள் ராமேஸ்வரம் துறைமுக போலீசாரிடம் முறையிட்டனர். வழக்கு பதிய தாமதம் ஆனதால் ஆத்திரமடைந்தவர்கள், நேற்று தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்தனர்.
போலீசார் சமரசம் செய்த பின் மறியலை கைவிட்டனர். நம்புசரவணன் உள்ளிட்ட ஐந்து பேர் மீதும் கந்து வட்டி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

