ADDED : ஏப் 30, 2024 05:42 AM
சென்னை : சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைக்கு, நாளை முதல் ஜூன் 2ம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர், எம்.ஜோதிராமன் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைக்கு, மே 1 முதல் ஜூன் 2ம் தேதி வரை கோடை விடுமுறை. இந்த கால கட்டத்தில், மே 6, 7ம் தேதிகளில் மனுத்தாக்கல் செய்யலாம்; அந்த மனுக்கள் மே 8, 9ல் விசாரணைக்கு எடுக்கப்படும்.
மே மாதத்தின் பிற வாரங்களில், திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மனுத்தாக்கல் செய்யலாம்; அந்த மனுக்கள் புதன், வியாழக்கிழமைகளில் விசாரணைக்கு எடுக்கப்படும்.
அவசர வழக்குகளை விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்றத்தில், மே 8, 9ம் தேதிகளில் நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, கே.குமரேஷ்பாபு, ஆர்.கலைமதி; மே 15, 16ம் தேதிகளில் நீதிபதிகள் பி.டி.ஆஷா, என்.செந்தில்குமார், ஆர்.சக்திவேல்.
மே 22, 23ம் தேதிகளில் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி.பாலாஜி, சி.சரவணன்; மே 29, 30ம் தேதிகளில் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், வி.லட்சுமிநாராயணன், ஜெ.சந்தியநாராயண பிரசாத், எஸ்.சவுந்தர் ஆகியோர் வழக்குகளை விசாரிப்பர்.
இதேபோல, மதுரை கிளையில் மே 8, 9ம் தேதிகளில், நீதிபதிகள் பி.வேல்முருகன், பி.தனபால், அப்துல் குத்துாஸ்; மே 15, 16ம் தேதிகளில் பி.வேல்முருகன், கே.ராஜசேகர், பி.வடமலை; மே 22, 23ம் தேதிகளில் நீதிபதிகள் ஆர்.என்.மஞ்சுளா, சி.குமரப்பன், எஸ்.ஸ்ரீமதி.
மே 29, 30ம் தேதிகளில் நீதிபதிகள் ஆர்.விஜயகுமார், ஜி.அருள்முருகன், எல்.விக்டோரியா கவுரி ஆகியோர் வழக்குகளை விசாரணைக்கு எடுத்து கொள்வர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

