ADDED : ஆக 04, 2024 01:09 AM

சென்னை:தமிழகத்தில் கடந்த ஓராண்டில் யானைகள் எண்ணிக்கை, 102 ஆக அதிகரித்துள்ளன.
தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா எல்லையோர மாவட்டங்களில், ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு, மே 23 முதல் 25ம் தேதி வரை நடந்தது. தமிழகத்தில், 26 வனப் பிரிவுகளில் நடந்தது.
கணக்கெடுப்பில், 1,836 வனத்துறை ஊழியர்கள், 342 தன்னார்வலர்கள் என, 2,178 பேர் ஈடுபட்டனர்.
இந்த கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் முறையாக பகுப்பாய்வு செய்யப்பட்டு, 26 வனப் பிரிவுகளில் யானைகள் எண்ணிக்கை மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கையையும், அதன் வாழ்வியல் முறைகளையும் அறிந்து கொள்ள உதவும்.
சென்னையில் நேற்று யானைகள் கணக்கெடுப்பு அறிக்கையை, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
யானைகள் பாதுகாப்புக்காக, தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக, யானைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. தமிழகத்தில், 2023ல் 2,961 ஆக இருந்த யானைகள் எண்ணிக்கை, தற்போதைய கணக்கெடுப்பு அறிக்கையின்படி, 3,063 ஆக உயர்ந்துள்ளது.
அகத்திய மலை யானைகள் காப்பகம், தமிழ்நாடு யானைகள் பாதுகாப்பு இயக்கம், யானைகள் வழித்தடங்களை பாதுகாத்தல், மேம்படுத்துதல் போன்ற, அரசின் நடவடிக்கைகளே, யானைகள் எண்ணிக்கை உயர்வுக்கு காரணம்.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.