தொல்லை தந்த குரங்கை கொன்று சமைத்து சாப்பிட்ட இருவர் கைது
தொல்லை தந்த குரங்கை கொன்று சமைத்து சாப்பிட்ட இருவர் கைது
ADDED : மார் 10, 2025 05:51 AM

திண்டுக்கல் : திண்டுக்கல், வீரசின்னம்பட்டியை சேர்ந்த கேட்டரிங் மாஸ்டர் ராஜாராம், 33. இவருக்கு சொந்தமான மாந்தோப்பில், சில தினங்களாக குரங்குகள் மாங்காய் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை நாசம் செய்தன.
ராஜாராம், வனவிலங்குகளை அடிக்கடி வேட்டையாடி சமைத்து சாப்பிடும் பழக்கம் கொண்ட, வடுகப்பட்டியைச் சேர்ந்த தேங்காய் வெட்டும் தொழிலாளி ஜெயமணி, 31, என்பவரை சந்தித்து குரங்குகளை கொல்லுமாறு கூறினார்.
அதற்கு கூலியாக, 1,000 ரூபாயை ஜெயமணியிடம் கொடுத்தார். நேற்று முன்தினம் மாந்தோப்பிற்கு வந்த ஜெயமணி, நாட்டு துப்பாக்கியால் அங்கு சுற்றித்திரிந்த குரங்கை சுட்டுக்கொன்று, தன் வீட்டில் அதன் இறைச்சியை சமைத்து சாப்பிட்டார். குரங்கின் தோலை தவசிமடை வடுகபட்டியில் உள்ள தோட்டத்தில் புதைத்தார்.
இதையறிந்த வனத்துறையினர், ராஜாராம், ஜெயமணியை கைது செய்து, குரங்கு தோல், நாட்டு துப்பாக்கி, வெடி மருந்தை பறிமுதல் செய்தனர்.