தே.ஜ., கூட்டணி வலிமையாக உள்ளது தி.மு.க.,வின் உதவி தேவையில்லை சொல்கிறார் மத்திய அமைச்சர் முருகன்
தே.ஜ., கூட்டணி வலிமையாக உள்ளது தி.மு.க.,வின் உதவி தேவையில்லை சொல்கிறார் மத்திய அமைச்சர் முருகன்
ADDED : ஆக 20, 2024 09:07 PM
திருநெல்வேலி,:''தேசிய ஜனநாயக கூட்டணி வலிமையாக உள்ளது. தி.மு.க.,வின் உதவி தேவையில்லை''என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்
சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் 253 வது நினைவு தினத்தையொட்டி திருநெல்வேலியில் உள்ள மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு பா.ஜ., சார்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின், முருகன் கூறியதாவது:
தி.மு.க.,வும் பா.ஜ,வும் இணக்கம் காட்டுகிறதா என்பதை ஒரு நிகழ்ச்சியை வைத்து தீர்மானிக்க முடியாது. மாநில அரசின் சார்பில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் கலந்து கொண்டார்; அது அரசியலுக்கு அப்பாற்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு ரூ. 11 லட்சம் கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
மெட்ரோ ரயில் தொடர்பான பயன்பாட்டு அறிக்கை, தணிக்கை அறிக்கை போன்றவை தமிழக அரசு இதுவரை அளிக்கவில்லை. அந்த அறிக்கைகளை தந்தால் உடனடியாக மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி வழங்கப்படும். கவர்னர் ஆண்டுதோறும் தேநீர் விருந்துக்கு அழைப்பது வழக்கம். தி.மு.க.,வினர் இந்த ஆண்டு விருந்தில் கலந்து கொண்டனர்.
கந்த சஷ்டி கவசத்தை இழிவு படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாங்கள் வேல் யாத்திரையை நடத்தினோம். அதற்கு முருக பக்தர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. பா.ஜ.,விற்கு ஆதரவாக ஓட்டு வங்கியாக மாறிவிடுமோ என்ற பயத்தில் தி.மு.க., இப்போது முத்தமிழ் முருகன் மாநாட்டை நடத்துகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணி வலிமையாக உள்ளது. தி.மு.க.,வின் உதவி தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

