ராயப்பேட்டை கோவில் கோபுரத்தை ஏன் இடிக்க வேண்டும்: ஐகோர்ட் கேள்வி
ராயப்பேட்டை கோவில் கோபுரத்தை ஏன் இடிக்க வேண்டும்: ஐகோர்ட் கேள்வி
ADDED : ஜூலை 04, 2024 01:46 AM

சென்னை:சென்னை மயிலாப்பூர் பி.எஸ்.சிவசாமி சாலையைச் சேர்ந்த, ஆலயம் காப்போம் கூட்டமைப்பு தலைவர் பி.ஆர்.ரமணன் சார்பில், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு:
ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையில், ரத்தின விநாயகர் மற்றும் துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், நுாற்றாண்டுகள் பழமையானது.
இக்கோவிலில், ஐந்து அடுக்கு ராஜ கோபுரம் உள்ளது. மாநகரில் இக்கோவிலுக்கு, பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன.
இக்கோவில் ராஜகோபுரத்தை இடிக்கும் வகையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், இரண்டாம் கட்ட திட்டத்தை வடிவமைத்துள்ளது. பாரம்பரிய, பழமையான கோவில்களை பாதுகாக்கும் வகையில், மெட்ரோ திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தப்படும் என, அரசு உறுதியளித்தது.
கோவில் ராஜ கோபுரத்தை இடிக்கும் நடவடிக்கையை எதிர்த்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜூன் 14ம் தேதி மனு அளிக்கப்பட்டது.
அதற்கு பதிலும் இல்லை. எனவே, ராஜ கோபுரத்தை இடிக்கும் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்; திட்டத்தை மாற்றக் கோரி அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது சபீக் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கோவில் கோபுரத்தை ஏன் இடிக்க வேண்டும். தற்போது நம்மிடம் அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. அதன் வாயிலாக ராஜ கோபுரத்தை நகர்த்த முடியும் எனக் கூறிய நீதிபதிகள், இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல் தெரிவிக்கும்படி கூறி, விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தனர்.