நாணய வெளியீட்டுக்கு மத்திய அமைச்சர் ஏன்? பா.ஜ.,வுக்கு சப்பைகட்டு கட்டுகிறார் தினகரன்
நாணய வெளியீட்டுக்கு மத்திய அமைச்சர் ஏன்? பா.ஜ.,வுக்கு சப்பைகட்டு கட்டுகிறார் தினகரன்
ADDED : ஆக 30, 2024 09:05 PM
புதுக்கோட்டை:அ.தி.மு.க., ஒன்றிணைவதற்கு பழனிசாமி பதவி வெறியால் முட்டுக்கட்டையாக உள்ளார். 2026 சட்டசபை தேர்தலுக்குப் பின் அ.தி.மு.க.,வுக்கு மூடு விழா நடத்தி விடுவார்,'' என அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் தினகரன் அளித்த பேட்டி:
தி.மு.க.,வை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு அ.தி.மு.க., ஒன்றிணைய வேண்டும் என்பது தான் அனைவருடைய விருப்பமும். ஆனால், அனைவரின் எண்ணப்படி கட்சி ஒன்றிணைவதற்கு பழனிச்சாமி முட்டுக்கட்டையாக உள்ளார். பதவி வெறியால் இப்படி குறுக்கே நிற்கிறார்.
அ.தி.மு.க., ஒன்றிணைந்தால் தான் எதிர்காலத்துக்கு நல்லது. 2026ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்குப் பின், அ.தி.மு.க.,வை பழனிசாமி மூடு விழா நடத்தி விடுவார். அதற்குள் நிர்வாகிகள் விழித்துக் கொண்டு, ஒரு முடிவு எடுத்தால் மட்டுமே அ.தி.மு.க., தப்பிக்க முடியும்.
முதல்வர் வெளிநாடு பயணத்தில் ஏற்கனவே, சென்றபோது, ஈர்த்த முதலீடுகளில் என்ன பயன் கிடைத்துள்ளது. எத்தனை தொழிற்சாலைகள், எவ்வளவு வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளது என்பது தெரியவில்லை. மக்கள் வரிப்பணம் விரயமாக்கப்பட்டுள்ளது.
தற்போது, அமெரிக்காவுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக சென்றுள்ளார். தமிழகம் திரும்பும்போது எவ்வளவு முதலீடு கொண்டு வருகிறார் என பார்ப்போம்.
ஆந்திராவிற்கு மட்டும் மத்திய அரசு பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கி உள்ளது; தமிழகத்திற்கு ஓரவஞ்சனை செய்துள்ளது என்று கூறுவது தவறு. எல்லா மாநிலங்களுக்கும் பொதுவான நிதிநிலை அறிக்கை தான் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
தி.மு.க., - பா.ஜ.,விடம் மண்டியிட்டுக் கிடக்கிறது. 2026ம் ஆண்டு தேர்தலில் ஜெயிக்க முடியாது என்று தெரிவதால் தி.மு.க., - பா.ஜ.க.,விடம் மண்டியிட்டுள்ளது. கருணாநிதி நாணயம் வெளியட்ட நிகழ்ச்சியில், தமிழக அரசு அழைத்ததால், மத்திய அமைச்சர் வந்துள்ளார். இதனால், தி.மு.க.,விற்கும் பா.ஜ.க.,விற்கும் உறவு இருப்பததாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.